பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேரள போலீசாரால் அவமரியாதை.. குமரியில் நாளை பாஜக போராட்டம்- தமிழிசை
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலையில் வைத்து போலீஸ் அதிகாரியால் அவமதிப்புக்கு உள்ளானதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, நாளை கன்னியாகுமரி மாவட்ட பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலைக்கு வேறு பலர் வாகனங்களில் சென்றுள்ளனர். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கவில்லை. அவர் ஒரு சிலரைத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அழைத்து சென்றுள்ளார். பெரும் கூட்டத்தை அழைத்து சென்றதாக கூறப்படுவது தவறு.
எதையும் சொல்ல ஒரு வழிமுறை உள்ளது. காவல்துறை எவ்வளவு மோசமாக நடந்துள்ளது என்பதை அவர்கள் நடுவேயான விவாதத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
அரசியல் காரணத்திற்காக கேரளாவில் எங்கள் எம்.பி முரளிதரன், பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன், சசிகலா ஆசிரியை போன்றவர்கள் நியாயப்படி கோவிலுக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவினர் பக்தர்களாக இருக்க கூடாதா? பினராயி விஜயன்தான் இதை அரசியலாக்குகிறார்.
அதிகாரி எப்படி வேலை செய்கிறார்கள் என்பதற்கு வழி முறை உள்ளது. ஒரு கட்டுப்பாட்டை விதிக்கலாம். ஆனால் வேண்டுமென்றே பொன்.ராதாகிருஷ்ணனை, அவமரியாதை செய்தது தவறு.
புயல் பாதித்த பகுதிகளில், மத்திய அரசு அதிகாரிகள் பணியாற்றிக்கொண்டு உள்ளார்கள். மருத்துவ முகாம்களில் முழு பங்கு உள்ளது. மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற தோற்றம் தவறு. கடலூரில் புயல் வீசியபோது, காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடந்தது. தமிழக அரசு கேட்டது ரூ.5000 கோடி. மத்திய அரசு அப்போது அளித்தது சுமார் 200 கோடிதான். நாங்கள் ஒப்பிடவில்லை என்றபோதிலும், பாஜக அரசை விமர்சனம் செய்ய இவர்களுக்கு தகுதி இல்லை.
பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதை எதிர்த்து குமரி மாவட்டத்தில் நாளை பாஜக போராட்டம் நடத்த உள்ளது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார். பாஜக போராட்டத்தால், நாளை குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு பஸ் போக்குவரத்து தடைபடும் சூழல் எழுந்துள்ளது.