பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி!
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி அரசியலுக்கு அதிகாரப்பூர்வமாக களம் இறங்கியுள்ளார். அவர் வரும் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பாஜக தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராது என தெரிந்து தான் குஷ்பூ தனது கணவரை களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இணைந்துள்ளது. அந்த கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கியதுடன், மற்றொரு தொகுதியை பாரதிய ஜனதா கட்சி ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிமுக வழங்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த தொகுதியாக மதுரை மத்திய தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர் தனது அரசியல் பயணத்தை மிக முக்கியமான மதுரை தொகுதியிலிருந்து தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வரும் போது பாதுகாப்பான தொகுதிகளை தேர்வு செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை நேரடியாக திமுக முக்கி நிர்வாகியாக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதியை சுந்தர்.சி தேர்வு செய்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. சுந்தர் சி அரசியலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதும், அவரது மனைவியும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான குஷ்பூ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே குஷ்பூ அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், சுந்தர் சி அரசியலுக்கு வருவது குறித்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அது உறுதியாகி இருக்கும் நிலையில், மதுரை மத்திய தொகுதி அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.
இந்த தொகுதியில் தற்போது திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனால், இந்த தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மறுபக்கம் புதிய முகமாக அரசியலுக்கு வரும் சுந்தர் சி - இந்த இருவரின் மோதல் தேர்தலுக்கு முன்பே கவனத்தை ஈர்த்து வருகிறது. இருவரும் பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த முகங்களாக இருப்பதால், இந்த தொகுதி 'ஸ்டார்' அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
திரையுலகில் நீண்ட காலமாக வெற்றிகரமாக பயணித்து வரும் சுந்தர் சி.க்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.அதே நேரத்தில், உள்ளூர் அரசியல் அனுபவம் மற்றும் தொகுதியில் மிகப் பெரும் செல்வாக்கு, கட்சி பலம் ஆகியவை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பலமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் சுந்தர்.சி.யின் அரசியல் வருகையின் பின்னணியில் குஷ்பூ இருப்பதாக சொல்கின்றனர்.
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ பாஜகவில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பெயருக்கு தேசிய அளவிலான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2026 தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லுகின்றனர்.
இதை அடுத்து பாஜகவிடமிருந்து சீட்டு பெற முடியாத சூழலில் திரையுலகில் தங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான ஏசி சண்முகம் மூலம் அதிமுக விடமிருந்து சீட்டைப் பெற்று அதன் மூலம் தனது கணவரை களம் இறக்குகிறார். பாஜக நிர்வாகியாக இருப்பதால் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் தனது கணவரை குஷ்பூ களம் இறக்கி இருக்கிறார் என்கின்றனர் அரசியல் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications