EXCLUSIVE: இந்தியா கூட்டணி.. எதிர்க்கட்சிகளை கண்டு பாஜகவுக்கு பயமா? வெளிப்படையாக பேசிய பாஜக நாராயணன்
சென்னை: பல்வேறு எதிர்க்கட்சிகளும் இப்போது ஒரே அணியில் திரண்டு இந்தியா (I.N.D.I.A.) என்றவொரு கூட்டணியை அமைத்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒன் இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
இப்போது நாட்டில் இருக்கும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டணியை அமைந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு அவர்கள் இந்தியா (I.N.D.I.A.) என்றும் பெயரிட்டுள்ளன. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒன் இந்தியாவுக்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "பொதுவாக ஒரு பெயரை வைத்துவிட்டுத் தான் அதன் சுருக்கத்தைச் சொல்வார்கள். ஆனால், இங்கே இவர்கள் சுருக்கத்தை வைத்து, அதன் பிறகு கூட்டணி பெயரைச் சொல்கிறார்கள். இது ஒரு பெரிய ஜோக். INDIA என்று வர வேண்டும் என யோசித்து அதன் பிறகு அதற்கான பெயரை வைத்துள்ளனர். இது ஒரு மலிவான அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகள்: இந்தியாவுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்கள் கேட்கலாம். ஆனால், இந்தியா என்பது பாஜக தான். மோடி தான் என்பது அவர்களுக்கே தெரியும். இந்தியா என்று பெயர் வைத்துவிட்டு இந்த அத்தனை கட்சிகளும் தோல்வியடையப் போகிறார்களே என்பதே எனது வருத்தம்... இந்த கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் இந்தியா என்பது தேசியமே இல்லை எனச் சொல்லக் கூடியவர்கள். அதே கட்சி இப்போது தேசிய வளர்ச்சி குறித்துப் பேசுகிறோம் என்கிறார்கள். இதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி.
2014க்கு முன்பு நாடு எப்படி இருந்தது. அப்போது மொபைல் மூலம் 50 ரூபாய் கொடுத்து காய்கறி கூட வாங்க முடியாது.. இப்போது நம்மால் அதைச் செய்ய முடியும். அதற்குக் காரணம் டிஜிட்டல் இந்தியா தான். இப்படிப் பல விஷயங்களை நாம் சொல்லலாம். எங்குச் சென்று இந்தியாவுக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொன்னாலும்.. அது பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும்.

பாஜக கூட்டம் ஏன்: பெங்களூர் கூட்டத்திற்குப் போட்டியாக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி கூட்டத்தை நடத்தியதாகச் சிலர் சொல்கிறார்கள். நாங்கள் எப்போது கூட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் இஷ்டம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.. எங்களைக் கண்டு அஞ்சுவதால் தான் இப்படி எல்லாம் சொல்கிறார்கள்.
இவர்களை விட அதிக கட்சிகள் எங்களை நோக்கி வந்துள்ளன என்பதை அவர்களின் பயம்.. இன்று எங்களுக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் சொல்கிறார்கள். பிரதமர் மோடியுடன் போட்டிப் போட முடியாது என்று இவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம். யார் ஒருவர் நான் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை.. மற்றவர் தோற்க வேண்டும் எனக் கருதுகிறாரோ.. அவர் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டவராகவே கருதப்படுவார்.
50 இடம் கூட இல்லை: எங்கள் கூட்டணியில் யார் இருக்கிறார்கள். என்பதில் உங்களுக்கு என்ன கவலை.. பாஜக என்பது வலுவான ஒரு தேசிய கட்சி.. எதிர்க்கட்சி கூட்டணியில் எதாவது ஒரு கட்சிக்கு 50 இடமாவது இருக்கிறதா.. சுக்குநூறாக உடைந்த கண்ணாடி அவர்கள். அதை ஒட்ட வைக்க முயல்கிறார்கள். இப்போது எங்களிடம் 300+ எம்பிகள் உள்ளனர். அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் மட்டும் 400 இடங்களைப் பெறப் போகிறோம். எனவே, அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கவலைப்படத் தேவையில்லை.

எடப்பாடிக்கு ஏன் கூடுதல் முக்கியத்துவம் என்கிறார்கள். இது எங்கள் கூட்டணி.. நாங்கள் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்வோம். அதைக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. எங்கள் கூட்டணி அதிமுகவுடன் தான். மற்ற விஷயங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
400+ இடங்கள்: பாஜக மட்டும் நிச்சயம் 400 இடங்களில் வெல்லும்.. எனவே, எதிர்க்கட்சிகள் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. எனவே ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல் செய்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.. ஜனநாயகம், ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி மற்றொரு பக்கம் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்.
அடுத்தடுத்து தவறு செய்தவர்கள் வீடுகளுக்கு அமலாக்கத் துறை செல்லும். செந்தில் பாலாஜி யார்.. நில அபகரிப்பாளர், பண மோசடி செய்தவர். இதையெல்லாம் சொன்னது நான் சொல்லவில்லை.. முதல்வர் தான் சொல்லியிருந்தார். இப்போது அவர் மீதே ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்றால் என்ன சொல்ல முடியும். உள்ளே பயத்தை வைத்துக் கொண்டு.. வெளியே பேசி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் மீது நட்டும் நடவடிக்கை பாயும்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இயங்க விடவில்லை. ராஜ்நாத் சிங் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க ரெடி என தெரிவித்துள்ளார். பிரதமரும் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. இந்தியாவின் வளர்ச்சி, புகழைப் பொறுக்காமல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இப்படிதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications