தாமரையில் தொலைந்த இலைகள்! பிஜேபி முன்பு அடையாளத்தை இழக்கும் அதிமுக? குமுறும் ரத்தத்தின் ரத்தங்கள்
சென்னை: மதுராந்தகத்தில் நேற்றைய தினம் ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஒன்றாக தொண்டர்கள் முன தோன்றினார்கள்.. கைகளை குலுக்கி கொண்டார்கள்.. கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை சொல்லி கொண்டார்கள்.. கடந்த வாரம்வரை, தங்களுக்குள் எந்தவித அரசியல் பிரச்சனையும் இல்லை என்பது போல அண்ணன் - தம்பி - பங்காளி பாச உறவுகளை பொதுமேடையில் காட்டிக் கொண்டார்கள்... ஆனாலும் அதிமுகவின் ஒரு தரப்பில் இதை ரசிக்கவில்லை.. அவர்களுக்கு ஒரு குழப்பம் உள்ளது.. அது என்ன தெரியுமா?
பாஜகவை ஏற்காத பலர் இன்னமும் அதிமுகவில் இருக்கவே செய்கிறார்கள்.. கட்சியின் திராவிட அடையாளம், சொந்த கொள்கைகள் மதித்து காப்பது என இன்னமும் ரத்தத்தின் ரத்தங்கள் இருக்கதான் செய்கிறார்கள்..

அரசியல் காரணங்களால், சில நேரங்களில் கூட்டணியில் சேர்வது அவசியம் என்று நினைத்தாலும், கட்சி தனது தனித்துவத்தையும், தங்களது நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அந்த ரத்தத்தின் ரத்தங்களின் எண்ணமாக உள்ளது...
என்டிஏ பொதுக்கூட்டம்
ஆனால், நேற்று மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டமானது, என்டிஏ கூட்டத்தின் பெயரில் கூட்டம் நடந்திருந்தாலும், முழுக்க முழுக்க பாஜக மேடைப் போலவே காட்சி அளித்ததாகவே அதிமுகவின் சில தொண்டர்கள் கருதுகிறார்களாம்..
இதுகுறித்து நாம் சில அதிமுக தொண்டர்களிடம் பேசினோம்.. அவர்கள் தங்கள் உளக்குமுறலை கொட்டி தீர்த்துவிட்டார்கள்..
நம்மிடம் அவர்கள் சொன்னபோது, "மேடையில் தென்பட்ட கொடிகள், தொண்டர்கள் கையில் ஏந்தி வந்த சின்னங்கள் அனைத்துமே பாஜக தாமரையாகவே தெரிந்தது.. அதாவது பாஜக சின்னம் காணப்பட்ட அளவுக்கு, அதிமுக இலை சின்னம் நேற்றைய கூட்டத்தில் தென்படவில்லை...
அதிமுக அடையாளம்
அதேபோல பிரதமர் மோடி பேசும்போது, "பாஜகவின் என்டிஏ அரசு", "டபுள் என்ஜின் அரசு" என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொன்னார்.. அவரது இந்த பேச்சு, திராவிட சிந்தனையை மதிக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு, ஒருவேளை பாஜக இங்கு நேரடியாக ஆட்சி நடத்தப்போகிறதா? என்ற சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது..
எப்போதுமே அதிமுக வலுவாகவும் தனித்துவமாகவும் ஆட்சியை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பாஜக கண்காணிப்பில் நடக்கும் ஆட்சியாகத்தான் தோன்றும், அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பை தந்து விடும்..
முதலமைச்சர் வேட்பாளர்
அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியை இதுவரை அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக யாருமே முன்மொழியவில்லை... டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொண்டாலும், பிரதமர் மோடி அந்த வார்த்தையை சொல்லவில்லை.. மோடி மட்டுமல்ல, இதற்கு முன்பு வந்து சென்ற அமித்ஷாகூட, மேடையில் முதல்வர வேட்பாளர் எடப்பாடிதான் என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது...
அதிமுக என்ற கட்சியானது, பாஜக நிழலால் நிலைநிறுத்தப்பட்டதா, இல்லையா? இதற்கான பதிலை தெளிவாக வழங்க வேண்டும்.. கூட்டணிக்காக அதிமுக தனது அடையாளத்தை விட்டுவிடக்கூடாது.. கூட்டணியில் இருந்தாலும், அதிமுக தனது தனித்துவத்தை, திராவிட அடையாளத்தை மறக்கக் கூடாது.
குமுறும் ரத்தத்தின் ரங்கள்
ஒரு பக்கம் கூட்டணி அவசியம் என்றாலும்கூட, கட்சியின் தனித்துவம் பாதுகாப்பது முக்கியம்.. இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு அதிமுக மேலிட தலைவர்களுக்கு மட்டுமே உண்டு... அப்போதுதான் தொண்டர்கள் இறங்கி களத்தில் வேலை பார்க்க முடியும்" என்று ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் சில ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications