தமிழகத்திற்கு நீங்க... புதுச்சேரிக்கு நாங்க... அதிமுகவிடம் டீலுக்கு தயாராகும் பாஜக..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக தேசிய தலைமை.
ஏனெனில் தங்கள் நேரடி எதிரியான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை புதுச்சேரியில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார் ஜே.பி.நட்டா.
இதனால் தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரி பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அவர்.
பாஜக-அதிமுக
தமிழக சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து புதுச்சேரிக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு வரும் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு கூட்டணி பலம் மிகவும் அவசியமாகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு திமுக எப்படி விட்டுக் கொடுத்துள்ளதோ அதேபோல் அதிமுகவும் பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே இப்போது எழுந்துள்ள கோரிக்கையாகும்.
தன்னிச்சை முடிவு
இதற்கு காரணம் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி மீது பாஜக உள்ளூர் தலைவர்களுக்கு எழுந்துள்ள அதிருப்தியே காரணம். கடந்தாண்டு நடைபெற்ற புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தெரியாமல் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது. கூட்டணியில் இருக்கும் தங்களிடம் ஒரு மரியாதைக்கு கூட சொல்லாமல் ரெங்கசாமி இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல எனக் கூறி தனித்துப் போட்டியிடுவோம் என பரபரப்பு கிளப்பினார் பாஜக புதுச்சேரி தலைவர் சாமிநாதன்.
பாஜக ஆட்சி
இதனால் அப்போது இருந்தே என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணியில் சுமூக உறவு இல்லாத நிலையே நீடித்து வருகிறது. மேலும், ரெங்கசாமியை முதலமைச்சராக்கினால் நமக்கு என்ன பயன் என்றும் உள்ளூர் தலைவர்கள் மேலிடத்தில் கேள்வியை எழுப்பியுள்ளனர். இதனால் எல்லா கணக்குகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்த பாஜக மேலிடம், புதுச்சேரியில் ஏன் நாம் ஆட்சி அமைக்கக் கூடாது என சிந்திக்கத்தொடங்கிவிட்டது.
கூட்டணிப் பேச்சு
இதன் வெளிப்பாடாக அதிமுகவுடன் நடத்தவுள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே பாஜகவின் இந்த டீலிங்கை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே.