அவருக்கு மட்டும்தான் கட்டுப்படுவோம்.. கொங்கில் களமிறக்கப்பட்ட அண்ணாமலை டீம்.. நயினாருக்கு தெரியுமா?
சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவாளர்களை பாஜகவில் உருவாக்கி வைத்திருந்தார். அண்ணாமலையிடமிருந்து பதவி பறிபோன நிலையில், அவரது டீம் அப்படியே உயிர்ப்புடன் தான் இருந்து வருகிறது.
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அவரது டீம், வலுவாக இருந்து வருகிறது. அந்த வகையில், தனது ஆதரவாளர்கள் டீமை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள திட்டமிட்டு செயலாற்றத் தொடங்கியுள்ளார் அண்ணாமலை.

அதற்கு முதல் கட்டமாக, கோவையில் அவரது ஆதரவாளர்கள் இன்று ஒன்று திரள்கிறார்கள். கோவை பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.
அண்ணாமலை ஆலோசனை
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், 'அண்ணாமலையின் கரத்தை வலிமைப்படுத்த தொடர்ந்து அவரது தலைமையில் இயங்குவது, கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையின் அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது, அவரின் உத்தரவுகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இயங்குவது என்கிற ரீதியில் முடிவு எடுக்கவிருக்கின்றனர்' என்ற தகவல் நமக்கு கிடைக்கின்றன.
கோவையைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தின் பிற மாவட்டங்களிலும் இதே ரீதியிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிகிறது. கோவை மாவட்டத்தில் நடக்கும் இந்த கூட்டத்தின் சாதக-பாதகங்களை வைத்து அடுத்தக் கூட்டத்திற்கு திட்டமிடப்படலாம் என்கின்றனர் பாஜகவினர்.
அண்ணாமலை பதவி கிடைக்கல
தற்போது வரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அண்ணாமலையுடன் சேர்த்து வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருக்கும் கட்சி தலைமை், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியிருக்கிறது. சசிகலா புஷ்பா, சரத்குமார் போன்றவர்களுக்கும் இதே பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இது அதிகாரம் மிக்க பதவி எல்லாம் கிடையாது. கவுரவம் மிக்க பதவி. முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டத்திற்கு இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் இந்த பதவிக்கு தனியாக பொதுக்குழு கூட்டம் தவிர்த்து வேறு பெரிய அதிகாரங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ஆந்திர பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.
ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கான இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக போட்டி இடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது..தெலுங்கு தேசம் - பாஜக சார்பாக இதற்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், வெங்கட சத்யநாராயணாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதனால் அண்ணாமலை அங்கிருந்து எம்பி ஆக மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. பவர்புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்போது ஆந்திர பிரதேச எம்பி வாய்ப்பு பறிபோய் உள்ளதால் அண்ணாமலை எங்கிருந்து அமைச்சராக போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா வழியாக இவர் எம்பி ஆகி அமைச்சர் ஆக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications