யாருக்கு குறி? அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிய பாஜக மாவட்ட தலைவர்.. கமலாலய ஊழியர் வீட்டிலும் சோதனை!
சென்னை: சென்னையில் பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் தமிழ்நாட்டில் சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. மணல் குவாரி தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாக ரெய்டு நடைபெற்றது. சென்னையில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி அதிபர்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. சென்னை ஓஎம்ஆர் சாலை உள்பட தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை தியாகராய நகர் சரவணா தெருவில் உள்ள விஜய் அபார்ட்மெண்ட்ஸில் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரை தளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் தென்சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பணிபுரியும் ஜோதிமணி என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்றம் பற்றிய தகவல் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே, தென்சென்னை மாவட்ட பாஜக தலைவர் காளிதாஸ் வீட்டிலும், பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி என்பவரின் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications