எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து ‘பிபிசி’யை குறிவைக்கும் பாஜக.. தக்க பாடம் கிடைக்கும்.. ஸ்டாலின் கண்டனம்!
மத்திய அரசின் அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சர்வே நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று திடீர் சர்வே மேற்கொண்டனர்.
அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீது மத்திய அரசின் அமைப்புகளை பாஜக அரசு ஏவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பிபிசி அலுவலகத்தில் சர்வே
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் இன்று திடீர் சர்வே நடத்தினர். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சர்வே நடத்தியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை மற்றும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் தற்போதைய நிலை குறித்து பிபிசி ஆவணப்படங்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்த திடீர் சர்வே அந்நிறுவனத்தை அச்சுறுத்துவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

ஸ்டாலின் கண்டனம்
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. ஆனால், பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசின் கீழ் நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காகக் செயல்படுவதோடு அவற்றின் சுதந்திரத்தன்மையையும் முற்றிலுமாக இழந்துவிட்டன.

அரசியல் எதிரிகளை குறி வைக்க
அண்மைக்காலமாக, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளைத் குறி வைத்துத் தாக்குவதற்கு அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கருவிகளின் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சர்வேயும் புதிதாக இணைந்துள்ளது.

தக்க பாடம் கிடைக்கும்
மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருவதற்குக் காரணமானவர்கள், நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications