கொஞ்சம் ‛கேப்’ விட்டால் பூந்துடுவோம்.. நீங்க 240 எம்பி தான்! பாஜகவை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மத்தியில் தற்போது நடப்பது பெரும்பான்மை ஆட்சி அல்ல. ஆளும் கட்சியான பாஜகவுக்கு 240 எம்பிக்கள் தான் உள்ளனர். இதனால் எச்சரிக்கையுடன் பாஜக தலைமை செயல்பட வேண்டும். கொஞ்சம்‛கேப்' விட்டால் நாங்கள் பூந்துவிடுவோம் என முதல்வர் ஸ்டாலின் பரபரப்பாக வார்னிங் செய்தார்.
திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இன்று காஞ்சிபுரத்தில் பவளவிழா நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.

இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் உடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனித்து ஆட்சியை பிடிக்க பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த முறை பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து கூட்டணி கட்சிகளின் எம்பிக்களை சேர்ந்து தற்போது 293 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியில் உள்ளது. மீண்டும் மோடி பிரதமராக உள்ளார்.
இந்நிலையில் தான் பாஜவுக்கு தனி பெரும்பான்மை இல்லாததை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்தார். அதாவது முதல்வர் ஸ்டாலின், ‛‛இப்போதைய மத்திய அரசு மாநிலங்களை, யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சிக்கிறது. மாநிலங்களை ஒடுக்கி ஒற்றை ஆட்சி தன்மையை கொண்டு வர ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? 7 கட்டங்களாக தான் தேர்தலை நடத்த முடிந்தது.
இது எப்படி இருக்கிறது என்றால் ‛கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்ட சொல்வார்களாம்' அதுபோல் இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இப்படியான சூழலில் நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என சொல்வதில் வெட்கமில்லையா? ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என ஒரே பாட்டை பாடி கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது. இதனால் என்ன நடக்கும். மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும். மாநிலங்களில் குழப்பம் ஏற்படும். முன்கூட்டியே ஆட்சிகள் கலைக்கப்படும்.
இந்த வேளையில் இன்னொரு விஷயத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். தற்போது நடப்பது பெரும்பான்மை ஆட்சி அல்ல. மத்தியில் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்கள் வேண்டும். ஆனால் ஆளும் கட்சிக்கு 240 பேர் தான் உள்ளனர். இதனால் எச்சரிக்கையுடன் பாஜக தலைமை செயல்பட வேண்டும். கொஞ்சம் கேப் விட்டால் நாங்கள் பூந்துவிடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்'' எனக்கூறினார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது லோக்சபாவில் பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை. இதில் பாஜகவுக்கு 240 எம்பிக்கள் உள்ளனர். அதேவேளையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 53 எம்பிக்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 12 எம்பிக்கள், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசனோவுக்கு 7 எம்பிக்கள் உள்ளனர்.
மாறாக ‛இந்தியா' கூட்டணிக்க மொத்தம் 249 எம்பிக்கள் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 97 எம்பிக்கள், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 37 எம்பிக்கள், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்பிக்கள், திமுகவுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர். ‛இந்தியா' கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் இன்னும் 23 எம்பிக்களின் ஆதரவு தான் தேவை. பாஜக கூட்டணியில் இருந்து 23 கட்சிகளின் எம்பிக்கள் ‛இந்தியா' கூட்டணிக்கு தாவினால் மத்தியில் பாஜக ஆட்சி கவிழும். அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த வார்னிங்கை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications