தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது.. 2024 லோக்சபா தேர்தலில் எங்க பிளான் இதுதான்.. அண்ணாமலை பேச்சு
சென்னை: அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ளது.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தலில் தனியாக ஒரு அணியை அமைத்து பாஜக சந்திக்கும் என அக்கட்சித் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையே தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேச்சு: கடந்த சனிக்கிழமை மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ளக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சென்னை வந்திருந்தார். அப்போது நட்சத்திர விடுதி ஒன்றில் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதாக வெளிப்படையாகவே கூறியதாகத் தகவல் வெளியானது. இதைக் குறிப்பிட்டும் அண்ணாமலை பாஜக வளர்ச்சி குறித்துப் பேசியுள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "பாஜக வளர்ந்துவிட்டதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது. நரேந்திர மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாகவே பலரும் உழைத்து கட்சியை வளர்த்துள்ளனர்.
பாஜக வளர்ந்துள்ளது: 2024இல் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பது அந்த தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். மற்றவர்கள் பாஜக குறித்துக் கூறுவதில் எங்களுக்குக் கவலை இல்லை. பாஜக நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரியளவில் வளர்ந்துள்ளது. அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
பாஜக சார்பில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். கட்சியா ஒருங்கிணைப்பது, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பிரசாரம் பணிகளை இவர்கள் கவனிப்பார்கள். இதன் காரணமாகவே 234 சட்டசபை தொகுதிகள், 39 லோக்சபா தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமிக்கிறோம்.
பாஜக பிளான்: தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கிறது. அப்போது என்டிஏ கூட்டணி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு எடுக்கலாம். ஏனென்றால் அப்போது தான் யார் எங்கே போட்டியிடுவார்கள் என்பது தெரியும். இப்போது கட்சியை வலிமைப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளைத் தலைவர்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த குழு பயன்படும். கட்சியில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளையும் இவர்கள் தீர்ப்பார்கள்.
மக்கள் வரிப் பணத்தில் இன்று ஆட்சியை நடத்துவோர் திமுகவினர். அவர்கள் அனைத்து வரி, மானியம் மூலம் 1.60 ஆயிரம் கோடியைப் பெறுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் வைக்க வைப்பது எதிர்க்கட்சியாக பாஜகவின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
மோடி அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதைக் கேள்வி கேட்பதும் அந்த பொய்யை உடைத்து மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்வதும் எங்கள் கடமை. கட்சிக்கு என்ன வேண்டுமோ அதைத் தான் செய்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications