தேமுதிகவை சுற்றி வளைக்கும் பாஜக மேலிடம்.. தட்டிக் கழிக்கும் பிரேமலதா.. உள்ளே இறங்குகிறாரா அமித் ஷா?
சென்னை: கூட்டணி விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் முடிவைச் சொல்லுங்கள் என தேமுதிக தலைமையிடம் பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. திமுக ஏற்கனவே உள்ள கூட்டணியை தொடர உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்காக, பலமான கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.

உள்ளே இறங்கிய அமித் ஷா
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அமித் ஷாவே முன்னின்று தேர்தல் கூட்டணியை உறுதி செய்து வருகிறார். அதிமுக முரண்டு பிடித்த நிலையில் அமித் ஷாவே நேரடியாக இறங்கி அதிமுக கூட்டணியை உறுதி செய்தார். கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அருகில் வைத்துக்கொண்டே கூட்டணியை அறிவித்தார்.
அதற்கு அடுத்தபடியாக பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்த்து, பிரமாண்ட கூட்டணியாக்குவதற்கும், ஜூன் மாதம் முதல் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தி கூட்டணியை பலப்படுத்தவும் அமித் ஷா திட்டமிட்டிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தக் கூட்டணி பேச்சு முடிவுக்கு வரவில்லை. அதோடு, அமித் ஷாவின் தமிழக பயண திட்டங்களும் மாற்றமடைந்தன.
மதுரை வரும் அமித் ஷா
இந்நிலையில் தான் இன்று இரவு மதுரை வரும் அமித் ஷா, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கிறார். இந்த மாதத்திற்குள், தமிழகத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்து, வரும் செப்டம்பரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவும், அந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க வைத்து, தமிழகத்தின் தேர்தல் பிரசாரத்தை துவக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைகள் அழுத்தம்
இதையொட்டி, பாமக, தேமுதிகவுடன் பாஜக தலைகள் பேச்சுவார்த்தையை வேகப்படுத்தி உள்ளனர். ஆனால், அந்த இரு கட்சிகளுமே, தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால் இப்போதைக்கு எதையும் உறுதிப்படுத்த வேண்டாம் என்ற திட்டத்தில் இருந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வருகிறார்.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் இந்த முறையே ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்தது திமுக. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தருகிறோம் எனக் கூறி விட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சூழலில் கூட்டணியில் தேமுதிகவை இணைக்கும் பொறுப்பை பாஜகவே கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பிரேமலதாவிடம் பாஜக மேலிடம்
பாஜக மேலிட தலைவர்களின் சார்பில், தேமுதிக தலைமையிடம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்களின் பலம் என்ன என்பது, எங்களை விட உங்களுக்கு நன்கு தெரியும். கூட்டணியை தேர்தல் நெருக்கத்தில் அறிவித்தால், தொண்டர்கள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவது சிரமம், அது வெற்றியை பாதிக்கும் என எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கூட்டணியை முன்கூட்டியே முடிவு செய்யும் பணியில், அமித் ஷா தீவிரம் காட்டுகிறார். கூட்டணியில் சேருவது பற்றி தேர்தல் நெருக்கத்தில் தான் அறிவிப்போம் என பிடிவாதம் காட்டாமல் சீக்கிரம் முடிவு எடுங்கள் என பிரேமலதாவிடம் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீட் கணக்கு உறுதியாக வேண்டும்
பிரேமலதாவோ, பாஜக மேலிட தலைகள் நேரடியாக தம்மை சந்திக்க வேண்டும் என விரும்புகிறாராம். கூட்டணியை உறுதி செய்துவிட்டால் அதன்பிறகு பேரத்துக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும், கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும், பாஜக தலைமையை வைத்தே சீட் கணக்கை உறுதி செய்துவிட வேண்டும் என பிரேமலதா நினைக்கிறாராம்.
அதேபோல, பாமகவும் இப்போது கூட்டணி முடிவை அறிவிப்பதில் தயக்கம் காட்டுகிறது. தேமுதிக, பாமக தலைவர்களின் நிலைப்பாடுகள் அமித் ஷாவுக்கு சொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து, அமித் ஷாவே அடுத்தடுத்த தமிழக விசிட்களில் இந்தக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துச் சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications