பாஜக சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது.. அம்பலப்படுத்தியதால் சஸ்பெண்ட்.. காயத்ரிக்கு ஆதரவாக ஜோதிமணி!
சென்னை : பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் திருச்சி சூர்யா, டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான போன் உரையாடல் ஆடியோ அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகியையே திருச்சி சூர்யா தாறுமாறாக, ஆபாசமாக திட்டுவதாக அந்த ஆடியோவில் இடம்பெற்றிருந்தது.
இந்த ஆடியோ குறித்து கேள்வி எழுப்பிய பாஜகவின் காயத்ரி ரகுராம் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தரவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
தென் சென்னையில் களமிறங்க பிளான்.. காயத்ரி போட்ட திட்டம்? போன் போட்ட அண்ணாமலை.. என்ன நடந்தது?
அதிர்ச்சி ஆடியோ - நடவடிக்கை
பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் ஆபாசமாக திட்டிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
6 மாதம் - 7 நாட்கள்
ட்விட்டரில் குற்றம்சாட்டிய காயத்ரி ரகுராம் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், கடுமையாக ஆபாசமாகப் பேசி ஆடியோவில் சிக்கியவர் 7 நாட்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதும் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் ஆதரவாளர் என்பதால் சூர்யா சிவா காப்பாற்றப்படுவதாகவும், அண்ணாமலையை விமர்சிப்பதால் காயத்ரி ரகுராம் கட்டம் கட்டப்படுவதாகவும் பாஜகவிற்குள்ளேயே குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன.
இதுதான் பாஜக வரலாறு
இந்நிலையில் இதுகுறித்து, காங்கிரஸ் முன்னணி தலைவரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆர்எஸ்எஸ் / பாஜக சித்தாந்தம் அடிப்படையிலேயே பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை வெட்கமற்று ஆதரிப்பது, பாதுகாப்பது. பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் பாதுகாத்ததாக வரலாறு கிடையாது.
ராகவன் அல்ல
பாஜகவின் கே.டி.ராகவன், பாஜகவைச் சார்ந்த பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதை விசாரிக்க பாஜக ஒரு கமிட்டி அமைத்தது. அது என்ன ஆனது? அந்த அறுவெறுக்கத்தக்க செயலை வெளிக்கொண்டு வந்தவர்கள்தான் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். ராகவன் அல்ல.
இன்னொருமுறை நிரூபணம்
இன்றும் பாஜகவைச் சேர்ந்த சகோதரி, பாஜகவின் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். காசு கொடுத்து சமூக ஊடகங்களில் லைக்குகள் வாங்குவதை அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது" என ஜோதிமணி விமர்சித்துள்ளார்.