மாட்டுக்கு பர்த் சர்டிபிகேட் எங்கே? லாரியை நிறுத்தி கேட்ட பாஜக ரேகா! ஓடிவந்த திரிணாமுல் காங்கிரஸ்
சென்னை: மேற்கு வங்கத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை மடக்கி பிடித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ. ரேகா.. பிறகு லாரி டிரைவரிடம், பசுக்களின் பிறப்பு சான்றிதழ் எங்கே என்று கேட்டுள்ளார்.. 14 வயதுக்கு உட்பட்ட பசுக்களை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் பசுக்களின் பிறப்புச் சான்றிதழை காட்டாவிட்டால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் பாஜக எம்எல்ஏ மிரட்டியுள்ளார். இந்த சம்பவம்தான் இணையத்தில் பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் ஹிங்கல் தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் ரேகா பாத்ரா.. இவர் லெபுகாலி பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரியை திடீரென மறித்து சோதனை செய்துள்ளார்.

மாட்டுக்கு பர்த் சர்டிபிகேட்
அப்போது சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், அந்த மாடுகளின் வயதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் காட்ட வேண்டும் என்று டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.. இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் வீடியோவாக எடுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு "இதுதான் பாஜக கொண்டு வந்த மாற்றம்" என்று கடுமையாக கிண்டல் அடித்து வருகிறது..
பாஜக எம்எல்ஏ ரேகா பாத்ராவின் இந்த விசித்திரமான நடவடிக்கை சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.. எனினும், எம்எல்ஏ ரேகா, இதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ ரேகா
மேற்கு வங்கத்தில் புதிய அரசை அமைத்துள்ள முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, சமீபத்தில்தான் பசு வதை தொடர்பாக கடுமையான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.. அதன்படி 14 வயதிற்கு உட்பட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
யாராவது சட்டவிரோதமாக மாடுகளை கடத்த முயன்றால், நாம் அவர்களை உடனடியாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.. அதனால்தான் மாடுகளின் வயதை உறுதி செய்ய பிறப்பு சான்றிதழ்களை கேட்டேன்" என்று ரேகா பாத்ரா தனது செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ இந்த விளக்கத்தை ஏற்காமல் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார்கள்.
பசு மாடுக்கு பிறப்புச் சான்றிதழ்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. குணால் கோஷ், "இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படும் பாஜக ஆளும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பசுவிற்கு வழங்கப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வருமாறு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறோம். அது சான்றுகளுக்கு உதவியாக இருக்கும். பாஜகவால் அப்படி ஒரு பசுவின் பிறப்பு சான்றிதழைக் காட்ட முடிந்தால், அந்தச் சான்றிதழ்களுக்கு யார் அங்கீகாரம் அளித்துள்ளார் என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும்" என்று கிண்டலடித்துள்ளது.
மாடுகளுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கும் நிலைக்கு பாஜக எம்எல்ஏக்கள் வந்துவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, தகுந்த சான்றிதழ் இல்லாமல் பசுக்களை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.. மாடுகள், காளைகள், கன்றுகள் மற்றும் எருமைகளை இறைச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு அரசு கால்நடை மருத்துவர் இணைந்து தகுதி சான்றிதழ் அதாவது ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட் வழங்க வேண்டும் என்பது விதியாகும்..
கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் வயதை ஆய்வு செய்த பிறகே இந்த சான்றிதழ் அரசு தரப்பில் வழங்கப்படும்.. ஆனால் இந்த புதிய சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, மாடு கொண்டு சென்ற லாரி டிரைவரிடம் நேரடியாக பிறப்பு சான்றிதழ் கேட்டு புதிய எம்எல்ஏ ரேகா பாத்ரா வம்பில் சிக்கியுள்ளார்..
மேற்கு வங்கத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மாட்டுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கும் விவகாரம் மிகப்பெரிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது..!!












Click it and Unblock the Notifications