சிங்கமாக ராகுல்.. திமுகவால் பயந்து நடுங்கும் பாஜக! முதல்வர் ஸ்டாலின் விளாசல்! தொண்டர்களுக்கு கடிதம்
சென்னை: திமுகவினரின் குரலை கேட்டால் பாஜகவினர் பயந்து நடுங்குகின்றனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி சிங்கமாக கர்ஜிக்கிறார் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுக எம்பிக்கள் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மணிப்பூர் வன்முறையை தடுக்க மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மணிப்பூர் பாஜக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விளாசினர்.

மேலும் இந்தி திணிப்பு, எய்ம்ஸ் கட்டுமானம் தாமதம், செங்கோல் விவகாரம் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி ஆகியோர் மத்திய அரசை விமர்சனம் செய்தனர். இதற்கு நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், இன்று நிர்மலா சீதாராமனும் திமுகவுக்கு பதிலடி கொடுத்தனர்.
குறிப்பாக இன்று நிர்மலா சீதாராமன் பேசியபோது, அவருக்கும், திமுக எம்பிக்களுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இது ஒருபுறம் இருக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பரபரப்பான விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்ட நிர்வாகிகள் திமுகவின் 23 அணிகள் இணைந்து கொண்டாட வேண்டும். இந்தியாவின் தலைநகரிலும், பிற நகரங்களிலும் கருணாநிதியின் பெயரை கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகின்றனர். நாட்டின் பிரதமர் தான் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் நிகழ்ச்சிகளில் தேவையின்றி திமுக மீது விமர்சனம் முன்வைத்து வருகிறார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு மீது ‛‛இந்தியா'' கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதத்தின் போது ஆணித்தனமான வாதங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார். மணிப்பூரை பற்றியும், அங்கு நடக்கும் கலவரம் பற்றியும் ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஆனால் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய அரசு அவரது எம்பி பதவியை பறிப்பதில் படுவேகம் காட்டியது. உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி தற்போது நாடாளுமன்றத்திலும் சிங்கமாக ராகுல் காந்தி கர்ஜித்து வருகிறார். மேலும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை சிபிஐயை கைப்பாவையாக பாஜக பயன்படுத்தி வருகிறது.
திமுக இத்தகைய பூச்சாண்டிகளுக்கும், மிரட்டல்களுக்கும் பயந்து ஒதுங்கும் இயக்கம் அல்ல. கலைஞர் என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. தமிழ் இனம், மொழி உள்ளிட்டவற்றை காத்து நிற்கும் வினைச்சொல். குமரி முதல் இமயம் வரை கருணாநிதி பெயரை சொல்லுவோம். அவரது கொள்கைகளை எடுத்து சொல்லுவோம்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications