"பாஜக ஆர்சிபி அணி போல.. தோற்றுக்கொண்டே இருக்கும்.. ஜெயிக்கவே முடியாது".. கலாய்த்த ஜெயக்குமார்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக்கொண்டே இருக்கும் ஆர்சிபி அணி போல தான் பாஜக என்றும், மோடியை 8 முறை அழைத்து வந்தும் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வெல்ல முடியவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் தோல்வியை சந்தித்துள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற அதிமுகவுக்கு, இம்முறை ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்தார். அதிமுக, பாஜக இரு கட்சிகளும் தோல்வி அடைந்துள்ள நிலையில், அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
அதிமுகவை விட பாஜக அதிக வளர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணாமலை கூறினார். கோவையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம் என கூறினார். அதிமுக வளரவே இல்லை என்றும், பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார் இதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார். புள்ளி விவரம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்டாரே தவிர, ஒரு கட்சியின் மாநில தலைவர் போல அண்ணாமலை செயல்படவில்லை.
2014ல் இதேபோல, அதிமுக தனியாக நின்றது. பாஜகவுடன் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தார்கள். அப்போது வாங்கிய ஓட்டை விட பாஜக கூட்டணி குறைவாகவே ஓட்டு வாங்கியுள்ளது. 10 வருடங்களில் பாஜக வாக்கு குறைந்துள்ளது.
பிரதமர் மோடியை 8 முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தும் ஒரு சீட் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் பாஜகவின் ஸ்ட்ராங் பெல்ட்டாக இருக்கும் கன்னியாகுமரியிலேயே வர முடியவில்லை. பாமக வலுவாக இருக்கும் தருமபுரியிலும் பாஜக கூட்டணியால் ஜெயிக்க முடியவில்லை.
பாஜகவுக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணி தோற்றுக்கொண்டே தான் இருக்கும். அதேபோலத்தான் பாஜக ஆர்சிபி அணியைப் போல தோற்றுக் கொண்டே இருக்கும். நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல. 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல தேர்தல்களில் வென்றோம், சிலவற்றில் தோற்றோம், வரும் தேர்தலில் மீண்டும் வெற்றியை பெறுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications