அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது பாஜக.. நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல சதி.. ஸ்டாலின் தாக்கு!
சென்னை: பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது என்றும், நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையிட்டி, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் "சமத்துவ நாள் உறுதிமொழி" ஏற்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்க, மற்றவர்கள் அதனை பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.

இதையடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்த நாள் பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது, அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை!
பா.ஜ.க எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது! நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications