பொய், அவதூறுகளை பரப்புகிறது பாஜக.. மிரட்டல்களுக்கு பயப்படாமல் உள்ளோம்.. முதல்வர் முக ஸ்டாலின்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜக பொய், அவதூறுகளை பரப்புவதோடு அவற்றை உண்மையாக்க முயற்சிக்கிறது என்றும், 75 ஆண்டுகளாக எதிரிகள் வடிவங்கள் வேண்டும் என்றால் மாறலாம் ஆனால் நாம் மாறவில்லை என்று பேசினார்.
எதிர்பாரா திருப்பம், காட்சியும் கருத்தும் என்பது உள்பட 5 புத்தகங்களை திருச்சி சிவா எழுதியுள்ளார். திருச்சி சிவா எழுதியுள்ள இந்த 5 நூல்களை வெளியிடும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டி ஆர் பாலு, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட திமுகவினர் பங்கேற்றனர்.

விழாவில் திருச்சி சிவா எழுதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதனை டி ஆர் பாலு பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- சமுத்துவ நெறியை போற்றுவோம். உயிர்களிடத்திடம் வேற்றுமையையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியினை போற்றுவோம். தனிப்பெருங்கருணை நாள் என திமுக அரசு கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று.
அவரது பிறந்தநாளான இன்று மதமான பேய் பிடியாமல் இருக்க வேண்டும் என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம். பாஜக பொய் பிரசாரங்களை செய்கிறது. பொய்களை பரப்புவதோடு மட்டுமின்றி அதனை உண்மையாக்கவும் பாஜக முயற்சி செய்கிறது. பாஜகவுக்கு என்று ஒரு வரலாறு இல்லாததால் வரலாற்றை மாற்றுகின்றனர். திமுக பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. 75 ஆண்டுகளாக திமுகவுடைய போரட்டத்தின் களம் மாறவில்லை.
யாருடைய மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் பயப்படாமல் உள்ளோம். எதிரிகள் வடிவங்கள் வேண்டும் என்றால் மாறலாம் ஆனால் நாம் மாறவில்லை. ஒவ்வொரு திமுக தொண்டனும் தன் இதயத்தில் எழுதி வைத்திருக்க வேண்டிருக்கிய சொற்கள் தமிழை விட, கழகத்தை விட, கலைஞரை விட நமக்கு என்ன பெருமை வேண்டும். என்னைப்பற்றி எழுதும் போது கலைஞராய் வாழும் தளபதி என்று எழுதியிருக்கிறார்.
என் மீதான் அன்பு மிகுதியால் அவர் அப்படி எழுதியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். என்னை இவர் தான் அடுத்த தளபதி என்று அறிவித்தவர் திருச்சி சிவா தான். 40 ஆண்டுகளாக என்னுடன் இருந்து வருகிறார். இதில் ஒரு சின்ன திருத்தம். கலைஞராக கலைஞர் கருணாநிதியால் மட்டுமே வாழ முடியும். நான் கலைஞர் வழியை பின்பற்றுகிறேன்.
இந்த புத்தகத்தில் நம்முடைய தலைவர்கள் வரலாறு இருக்கிறது. இயக்கத்தினுடையை தியாகம் இருக்கிறது. கழகத்தினர் எப்படி பேசவேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார், சிவா அவர்கள் தான் ஐஏஎஸ் ஆக முடியவில்லை என்று.. நான் சொல்கிறேன் ஐஏஎஸ் பதவிக்கு ஓய்வு உண்டு. ஆனால் நீங்கள் கொள்கையை பரப்பும் திமுக என்ற பயணத்துக்கு ஓய்வே கிடையாது என்பதை சொல்லுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications