வளர்த்த கடா.. மார்பில் பாய்ந்ததடா! நிர்மல் குமார் மீதே எகிறிய பாஜக ஐடி விங்! அண்ணாமலைக்கு சப்போர்ட்
நிர்மல் குமாரின் இந்த கடிதத்தை தொடர்ந்து அவர் மீது பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் ஐடி விங் தலைவராக செயல்பட்டு வந்த சிடிஆர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் தலைவராக இருந்த ஐடி விங்கே தற்போது அவருக்கு எதிராக ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வருகிறது.
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார் நேற்று மதியம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார்.
அதன் பின்னர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிர்மல் குமார் தன்னை அதிமுகவில் இணைந்துக்கொண்டு உள்ளார்.

ட்விட்டர் பதிவு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று குறிப்பிட்டு கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் வெளியிட்டார். அதில் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கி இருந்தார்.

ஒன்றரை ஆண்டுகள்
"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

செருப்பாக பயன்படுத்திய அண்ணாமலை
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

கமலாலயத்தின் செங்கல்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

தோல்வியடைந்தோம்
2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

420 மலை
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அண்ணாமலை பதில்
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "அன்பு சகோதரர் திரு.நிர்மல்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதே நேரம் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் நிர்மல் குமார் குழப்பத்தில் சென்றுள்ளதாக பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளார். அதை தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.

பாயும் ஐடி விங் -
நிர்மல் குமாரின் இந்த கடிதத்தை தொடர்ந்து அவர் மீது பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். பாஜக ஐடி விங்கில் அவருக்கு கீழ் பணியாற்றி தற்போது மாநில செயலாளராக இருக்கும் ஆனந்த பிரியா, கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ட்விட்டரில் விமர்சித்து உள்ளார்.

ஆனந்த பிரியா
"மிகக்கேவலமான, அழுக்கு நிறைந்த எண்ணங்கள் கொண்டவரை காலம் அடையாளப்படுத்தி இருக்கிறது. எவனோ எழுதிக் கொடுத்த (அ) சொல்லிக் கொடுத்த அறிக்கையை பதிவிட்டு தன்னுடைய தரத்தை நிரூபித்து விட்டார். தாராளமாக விலகிச் செல்லுங்கள், ஆனால், மனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கடும் விமர்சனம்
மேலும் ஒரு பாஜக ஐடி விங் செயற்பாட்டாளரோ, "பொறாமை வயிற்றெரிச்சல் இவற்றிற்கு மொத்த உருவம் CTR. இவருக்கு கீழ் பணியாற்றிய மகேஷ் குமார் யை Data management பிரிவில் போட்டதும் பொங்கி எழுந்தார். அதே போல் CTR கீழ் பணியாற்றிய ஆனந்த பிரியா மாநில செயலாளராக நியமித்ததும் வயிறு வெடித்தது.

ஹேஷ்டேக்குகள்
அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய tweet பதிவிற்கு likes வராமல் தடுத்து சின்ன புத்தி வேலை பார்த்தார். இவருக்கு என்று சில அல்லக்கைகள் இருக்கத்தான் செய்கிறது விரைவில் களையெடுக்க படுவார்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவரது விலகலை தொடர்ந்து #420மலை, #Annamalai ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications