"உரிமை தொகை.." இனி பாதி பெண்களுக்கு கிடைக்காது! காரணத்தை சொன்ன பாஜக குஷ்பு! பகீர் பேச்சு
சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கி வரும் மகளிர் உரிமை தொகை வரும் காலத்தில் பாதிப் பேருக்குக் கிடைக்காது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது மகளிருக்கு மாதம் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று காலை தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது உரிமை தொகை திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது உள்ள பயனாளிகளும் கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.. உரிமை தொகை பயணிகளின் பண வசதி உயர்ந்து உள்ளதா, அவர்கள் உயிரோடு உள்ளனரா என்பது குறித்தெல்லாம் மாதம் மாதம் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. உரியப் பயனாளர்களுக்கு இந்த உரிமை தொகை சென்றடைய இதைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
குஷ்பு: இதற்கிடையே இப்போது மகளிர் உரிமை தொகை கிடைக்கும் பாதிப் பேருக்கு வரும் காலங்களில் மாதம் ரூ. 1000 கிடைக்காது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "திமுகவும் காங்கிரஸும் விதவிதமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்த கட்சிகள். இது எல்லாருக்கும் தெரியும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர்கள் என்ன சொன்னார்கள்.. பிரசாரத்தின் சமயத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனச் சொன்னார்கள். தேர்தலில் வென்றதும் அது குறித்து பேச்சே இல்லை. எதிர்க்கட்சிகள் இதைத் தொடர்ந்து கேள்வியாக எழுப்பினோம். அதன் பிறகே 2 ஆண்டுகள் கழித்து உரிமை தொகை வழங்குவதாக அறிவித்தார்கள். அதுவும் அனைவருக்கும் இல்லை.. தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
உரிமை தொகை: ஆனால் இப்போது என்ன சொல்லி இருக்கிறார்கள் எனப் பாருங்கள். கையில் ஸ்கேல் உடன் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த போகிறார்களாம். அரசு சொன்ன தகுதி இருந்தால் மட்டுமே ரூ.1000 தருவார்களாம். இல்லையென்றால் கொடுக்கும் உரிமை தொகையையும் கூட நிறுத்திவிடுவார்களாம். அதாவது வரும் காலத்தில் பாதிப் பேருக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது. இப்படி என்னவெல்லாம் கதை சொல்கிறார்கள் எனப் பாருங்கள்.. தகுதி வாய்ந்த பெண்கள் என்றால்.. அதைப் பிரச்சாரத்தின் சமயத்திலேயே கூறியிருக்கலாமே..
பெண்களை ஏமாற்றி வாக்கு வாக்க வேண்டும் என்பதற்காக இந்த பொய்யைச் சொன்னார்கள். பெண்களும் ஏமாந்து வாக்களித்துவிட்டனர். கர்நாடகாவிலும் இதையேதான் காங்கிரஸ் செய்தது. அனைத்து பெண்களுக்கும் என முதலில் அறிவித்தவர்கள்.. இப்போது வீட்டிற்கு ஒருவருக்கு மட்டும் என்கிறார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி என்றாலே அது மக்களை ஏமாற்றும் கூட்டணி என்பதை மக்கள் இப்போது புரிந்திருப்பார்கள்.

இந்தியா கூட்டணி: இப்போது இவர்கள் எல்லாம் சேர்ந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.. அந்த "இந்தியா" கூட்டணியில் நரேந்திர மோடியைப் போல முடிவெடுக்கக் கூடிய ஆற்றல்மிக்க தலைவர் ஒருவராவது இருக்கிறார்களா.. அங்குள்ள அனைவரும் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமே உழைப்பவர்கள். அவர்களுக்கு நாட்டு மக்கள் மீது துளியும் அக்கறை இல்லை. காந்தி குடும்பமும், கருணாநிதி குடும்பமும் வாழ வேண்டும்.. ஆள வேண்டும் என்கிறார்கள்.. இதுவா கூட்டாட்சி தத்துவம்?
இது மக்களை ஏமாற்றும் கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொள்வதால் இப்போது இந்துத்துவா, சனாதனம் எனப் பேசி குழப்பப் பார்க்கிறார்கள்.. சனாதன வெறுப்பு குறித்துத் தான் இப்போது திமுக தொடர்ந்து பேசி வருகிறது. சனாதனிகளான இந்துக்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம். அதை ஒழிப்பதை எங்கள் வேலை என்று சொல்லி வாக்கு கேட்கும் துணிச்சல் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இருக்கிறதா.. அப்படிச் சொல்லி வாக்கு கேட்டால் அவர்களைக் கொள்கை வாதிகள் என்று பாராட்டலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications