வேல்யாத்திரை தடையின்றி நடக்கணும் ஏழுமலையானே... வேண்டிக்கொண்ட எல்.முருகன்!
வேல்யாத்திரை தடையின்றி நடைபெற வேண்டும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டிருக்கிறார்.
சென்னை: திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள். வேல் யாத்திரைக்கு எந்த தடையும் வரக்கூடாது என்றும் சிக்கலின்றி வேல் யாத்திரை நடைபெற வேண்டும் என்று திருமலை சென்று வேண்டிக்கொண்டிருக்கிறார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்.
வேல் யாத்திரைக்காக முருகன் வைத்த கோரிக்கையை ஏற்று தடையை நீக்குவாரா ஏழுமலையான் பார்க்கலாம்.
முருகனின் ஆயுதம் வேல். வேலாயுதம் கொண்டு கந்த சஷ்டி நாளில் சூரசம்ஹாரம் செய்தார் முருகன். முருக பக்தர்கள் முருகனை வணங்குவது போல வேலினை வணங்குவார்கள். பல ஆலயங்களில் வேல் மூலஸ்தானத்தில் வழிபட வைக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டியை கருப்பர் கூட்டம் அவமரியாதை செய்ய, அதை ஆயுதமாக எடுத்துக்கொண்ட தமிழக பாஜகவினர் சஷ்டி திதிகளில் கந்த சஷ்டி பாராயணமும் வேல் பூஜையும் நடத்தினர். தொடர்ந்து ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தவும் திட்டமிட்டனர்.

நவம்பர் 6 டூ டிசம்பர் 6
வேல் யாத்திரைக்கு தேர்வு செய்யப்பட்ட திதி தேய்பிறை சஷ்டி திதி. நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் யாத்திரையை முடிப்பது பாஜகவினர் திட்டம். இதற்கான கையில் வேலுடன் திருத்தணி கிளம்பினார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்.

தடை விதித்த அரசு
வேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து விட்டது. அதையும் மீறி திருத்தணி சென்ற எல். முருகன் சாமி தரிசனம் செய்து விட்டு யாத்திரையை தொடங்கினார். அவருடன் யாத்திரை கிளம்பிய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

அரசியல் யாத்திரை
முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடைபெறும் ஆன்மீக பயணம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டாலும் அடுத்து வரும் சட்டசபை தேர்தலை மையமாக வைத்தே யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக. இந்த யாத்திரைக்கு எதிர்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். உயர்நீதிமன்றமும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.

அரசியல் நாடகம்
தமிழகத்தில் மத உணர்வை தூண்டும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பாஜகவின் வேல்யாத்திரை அரசியல் நாடகம் என்றும், வாக்கு வங்கிக்காவே இந்த யாத்திரையை கையில் எடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்க முடியாது என்று அரசு உறுதியாக நின்றதோடு நவம்பர் 30ஆம் தேதி வரை ஆன்மீக ஊர்வலங்களுக்கு தடை விதித்து விட்டது.

தடையை மீறுவோம்
திட்டமிட்டபடி தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவோம் என்றும் டிசம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரை திருச்செந்தூரில் முடிவடையும் என்று கூறியுள்ளார் எல். முருகன். முதல்வர், துணைமுதல்வரை சந்தித்து வைத்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அனுமதியும் கிடைக்கவில்லை.

திருப்பதி தரிசனம்
பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்திடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில்தான் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் எல். முருகன். வேல் யாத்திரைக்காக முருகன் வைத்த கோரிக்கையை ஏற்று தடையை நீக்குவாரா ஏழுமலையான் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications