அமித்ஷாவின் சென்னை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7 ஆம் தேதி சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக பாஜக ஒரு கூட்டணியாகவும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு அணியிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணி என தற்போதைக்கு 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நேரத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்தார். மேலும் கூட்டணியை வலுப்படுத்த அதிமுக பாஜக கூட்டணி முயற்சித்து அதற்கான நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இதில் குறிப்பாக பாமகவை அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சிகள் ரகசியமாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், பாமகவில் தந்தை மகன் மோதல் இருந்து வருவதால் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இருக்குமா அல்லது விலகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ராமதாஸ் திமுக பக்கம் செல்ல விரும்புவதாகவும், அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், இதனாலேயே தந்தை மகன் பிரச்சினை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தந்தை மகன் மோதலை சமாதானப்படுத்தி பாமகவை அதிமுக - பாஜக கூட்டணி பக்கம் இழுக்க ஒரு புறம் முயற்சி நடப்பதாகவும் பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 7 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாள்குளத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வர இருப்பதாக கூறப்பட்டது.
அதிமு பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் - அன்புமணி இருவருக்கும் இடையே நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமித்ஷா சென்னை வரும் போது இருவரையும் சந்திக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் இருவருமே சமாதானம் ஆகாததன் காரணமாக அமித்ஷாவின் சென்னை பயணம் ரத்தாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications