அடை காத்த கோழி போல பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் தலைவராக முடியாது: அண்ணாமலை பேச்சு
சென்னை: திமுகவில் பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினால் தலைவராக முடியாது என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Recommended Video
தமிழக பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

வழக்கறிஞர்களுக்கு கேடயம்
நான்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிப் பெற்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார் அவர். இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர்கள் அரசியல்
அதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில் பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.

அடை காத்த கோழி
காலத்தின் கட்டாயத்தால் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தே தீரும். வார்த்தை தீயினால் சுடப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே பெரிய தலைவர்களாக வர முடியும். ஆனால், அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. தி.மு.க.வில், பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது.

பாஜகவை நோக்கி மக்கள்
2024ல் இந்தியா ஒரே கட்சியை அதாவது, பா.ஜ.கவை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,களை, பா.ஜ.க. பெறப்போவதை தடுத்து நிறுத்த முடியாது. சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி உங்களை தேடி வரும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

ஸ்டாலின் திட்டம்
சில தினங்கள் முன்பு, வேலூர், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் கட்சிகளைத் தேசிய கட்சியாக்கும் குறிக்கோளோடு உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்கிறார். இந்தியாவின் துணைப் பிரதமராகத் தான் ஆகிவிட்டு, தனது மகனைத் தமிழ்நாட்டின் முதல்வராக்க வேண்டுமெனக் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications