எங்கோ காதில் கேட்ட ஞாபகம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் பிளவு.. பாஜக விருப்பம் என்ன? சூசகமாக பதிலளித்த எச்.ராஜா!
சென்னை : அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மோதல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக தலைமையின் விருப்பத்தை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மோதல் வெடிக்கத் தொடங்கியது முதலே, இரு தரப்பினரும், டெல்லி பாஜக மேலிடத்தைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவு பெற போட்டி போட்டு வருகின்றனர்.
ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்தாலும், திரைமறைவில், தனது விருப்பங்களை ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸிடம் டெல்லி தலைமை வெளிப்படுத்தி வருவதாகவே கூறப்படுகிறது.

அதிமுக விவகாரத்தில் பாஜக
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் தொடங்கிய ஜூன் மாதம் முதலே, இரு தரப்புமே பாஜகவின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. டெல்லி சென்று மோடி, அமித்ஷாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திக்க முயன்றனர். அதேபோல, மோடி, அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களை சந்தித்துப் பேச முயன்று வருகின்றனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது எனக் கூறி வந்தாலும், ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும், பாஜக தலைமையின் கவனத்தைப் பெற முட்டி மோதி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.

அட்வைஸை கேட்கலையே
தொடர்ந்து பாஜக தலைமை, ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைப்பை வலியுறுத்தி வருவதாகவே தெரிகிறது. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறார். 2024 லோக்சபா தேர்தலைக் குறிவைத்து தாங்கள் கூறும் அறிவுரையை ஈபிஎஸ் கேட்காமல் பிடிவாதம் பிடிப்பதை பாஜக தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் பாஜக தலைவர்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒரே மாதிரி
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே நின்று வரவேற்றனர். பிரதமர் மோடி திரும்பிச் செல்லும் போதும், இருவரும் அருகருகே நின்று வழியனுப்பினர். பாஜக மேலிடம், இருவரையும் ஒரே மாதிரி நடத்துவதால் பாஜக மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் அப்செட்
60 எம்எல்ஏக்கள் பலம், 90 சதவீத கட்சி நிர்வாகிகளின் ஆதரவு என அனைத்தும் இருந்தும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிகரான மரியாதையே தனக்கு கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்து, ஈபிஎஸ் அப்செட்டில் இருப்பதாகவும், 2024 தேர்தலில், தனது முடிவே இறுதியானது, பாஜக அதனை ஏற்கவில்லை என்றால், பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறலாம் என்ற முடிவுக்கும் ஈபிஎஸ் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எச்.ராஜா சூசகம்
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் அதிமுகவில் நிலவி வரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் பிளவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சூசகமாக பதிலளித்த எச்.ராஜா, "நான் என்ன சொல்றேன்னா, "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என எங்கோ காதில் கேட்ட ஞாபகம், அதற்கு மேல் கூட்டணிக் கட்சி விவகாரத்தில் நான் தலையிடக்கூடாது" என எச்.ராஜா சிரித்தபடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications