சென்னையில் கைதான தாசில்தார்.. சோதனையை எதிர்த்த பாஜகவின் கராத்தே தியாகராஜன்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் லஞ்ச வழக்கில் கைதான தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில், அதற்கு பாஜகவின் கராத்தே தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எதற்காக எதிர்ப்பு தெரிவித்தார்.. என்ன நடந்தது என்பதை பற்றி பார்ப்போம்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக இருந்த 40 அடி சாலையில் ஒருவர் பகிரங்கமாக ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டார். இதனால் ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாக குறுகிவிட்டது. இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஆனால் சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் அளித்த புகார் மனு மீது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதை அடுத்து ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாக குறுகியதற்கு காரணமாக ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு சென்னை தெற்கு மண்டல துணை கமிஷனரை சந்தித்து சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் முறையிட்டார். அங்கு தெற்கு மண்டல துணை கமிஷனர் 3 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதியளித்ததுடன், அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இப்பணியை கண்காணிக்க சிறப்பு தாசில்தார் சரோஜாவைவும் அவர் நியமித்தார்.
இதனிடையே இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் இந்த சாலை 40 அடி சாலையாக இப்பகுதி மக்களுக்கு வழி கிடைக்கும். மேலும் இங்குள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே அருகில் உள்ள நில உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி வாங்கி தந்தால் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சரோஜா கோரினாராம்.
பின்னர் லஞ்சமாக கேட்ட ரூ.1 கோடி பணம் ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.3 லட்சத்தை முன்பணமாக தாசில்தார் சரோஜா கேட்டாராம்.ஆனால் அந்த பணத்தை கொடுக்க பொன் தங்கவேல் விரும்பவில்லையாம். இதை தொடர்ந்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் பொன் தங்கவேலு புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கும்போது தாசில்தார் சரோஜாவை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.
அதன்படி நேற்று மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சரோஜாவின் அலுவலகத்தை கண்காணித்தனர். முதலில் அடையார் எல்.பி.சாலையில் உள்ள சரோஜாவின் அலுவலகத்துக்கு ரசாயணம் தடவிய ரூ.3 லட்சம் லஞ்ச பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் அந்த பணத்தை சரோஜா நேரடியாக வாங்க மறுத்தாராம். தனது கணவரான பரங்கிமலை ஆயுதப்படை தலைமை போலீஸ்காரரான பிரவீனிடம் சொல்லி, லஞ்ச பணத்தை அவரது நண்பரான பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருண்குமாரிடம் கொடுக்குமாறு சரோஜா கூறிவிட்டாராம்.
அதன்பேரில் ரூ.3 லட்சம் லஞ்சப் பணம் போலீஸ்காரர் அருண்குமாரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமான போலீஸ்காரர் அருண்குமாரை பிடித்துள்ளார்கள். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் மீட்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச பணம் கேட்ட தாசில்தார் சரோஜாவையும் பின்னர் போலீசார் கைது செய்தார்கள்.
இதனிடையே சிறப்பு தாசில்தார் சரோஜா தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக இருந்தவர் என்பதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழக பாஜக மாநில செயலாளரும், தென்சென்னை தொகுதி பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் இந்த அலுவலகத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.
அங்கு நடந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட 41 வேட்பாளர்கள் விவரங்கள், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் சரோஜாவின் அலுவலகத்தில் இருந்த காரணத்தால், 41 வேட்பாளர்கள் முன்னிலையில்தான் சோதனை நடத்தி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பதை அவர்களிடம் பட்டியலிட்டு இருக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த நடைமுறையை லஞ்ச ஒழிப்பு போலீசார் பின்பற்றவில்லை என்று கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டினார்.
மேலும் இந்த சோதனையில் சதித்திட்டம் ஏதேனும் இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார், இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்திருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications