ஆம்பளையா இருந்தா அண்ணாமலை மீது வழக்கு தொடுத்து பாருங்க.. செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட நாராயணன்!
சென்னை : தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்து பாருங்கள் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான மோதல் போக்கு உச்சமடைந்து வருகிறது. இருவரும் மாறி மாறி கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில், அண்ணாமலை ஆம்பிளையாக இருந்தால் என் மீது வழக்குத் தொடரட்டும் எனக் கூறியிருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதற்கு பதிலடியாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செந்தில் பாலாஜியை மென்ஷன் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

தொடர்ந்து மோதல்
மின் வாரிய டெண்டர் விவகாரத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின்திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு வழங்கியதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். தமிழக ஆளுநரிடமும் இதுதொடர்பாக புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்தார். அப்போது தொடங்கிய மோதல் இப்போது உச்சமடைந்துள்ளது.

அண்ணாமலை எச்சரிக்கை
சமீபத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "செந்தில் பாலாஜியைப் போல யாரும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். காரணம் கோபாலபுரத்திற்கு மின் துறை மூலம் தனியார் நிறுவனம் மூலம் வரும் கோடிக்கணக்க்கிலும், டாஸ்மாக் மூலம் ஆண்டு வருமானம் பல கோடிகள் வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 2 அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். செந்தில் பாலாஜி இப்போதே சிறை செல்ல தயாராகிக் கொள்ளலாம். செந்தில் பாலாஜிக்கு சிறை உறுதி. ஏற்கனவே 5 கட்சிகளுக்கு சென்ற செந்தில் பாலாஜி, சிறைக்கு சென்ற பின்னர் ஆறாவது கட்சிக்கு மாறுவார்" எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

செந்தில் பாலாஜி சவால்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆம்பிளையாக இருந்தால், தைரியமும் நேர்மையும் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடரட்டும், மின் வாரியத்தில் தவறு நடப்பதாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்யட்டும் என்று சவால் விடுத்தார். அந்த வழக்கை தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

நாராயணன் பதிலடி
இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி, தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மென்ஷன் செய்து சவால் விட்டுள்ளார். நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்' என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

ஆம்பிளையாக இருந்தால்
பி.ஜி.ஆர், பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஊழல்களை வெளிப்படுத்திய போதெல்லாம், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அவதூறு வழக்கு தொடுப்பதாகவும் கூறிவிட்டு ஓடி ஒளிந்தவர்கள் தைரியசாலிகளா? ஆம்பிளைகளா? தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால் பாஜக மாநில தலைவர் மீது வழக்கு தொடர்ந்து பாருங்கள். யார் தைரியசாலி, ஆம்பிளை என்பது தெரிந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications