நயினார் பற்ற வைத்த தீ.. இனிமேல் "அவர்"தானாமே.. அடுத்த குண்டு.. எடப்பாடி பழனிசாமிக்கு கேட்டுச்சா..!
நயினாருக்கு அடுத்து அண்ணாமலையை புகழ்ந்துள்ளார் எம்எல்ஏ தமிழ்செல்வன்
சென்னை: திமுக ஆட்சியில் என்னென்ன நடக்கக்கூடாத விஷயங்கள் நடக்கிறதோ, அதை எதிர்த்துக் கேட்கக்கூடிய சக்தி பாஜக, மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் மட்டும்தான் இருக்கிறது என்று மகாராஷ்டிரா எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் புகழாரம் சூட்டி உள்ளார்.
திமுகவுக்கு மாற்று தாங்கள் தான் என்பதை பல வழிகளில், பல பேட்டிகளில், பல செயல்பாடுகளில் நிரூபித்து கொண்டிருக்கிறது தமிழக பாஜக.
இதை பலமுறை மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சொல்லி வந்த போதிலும், இதற்கான முதல் நெருப்பை கொளுத்தி போட்டது பாஜகவின் நயினார் நாகேந்திரன்தான்.

நயினார் நாகேந்திரன்
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நயினார் பேசியபோது, "தமிழக சட்டமன்றத்தில் இப்போது வரை அதிமுக ஒரு எதிர் கட்சியாக செயல்படவில்லை... அதிமுக கட்சி எப்போதுமே, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை பற்றி, பேசுவது இல்லை.. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் துணிச்சலோடு செயல்பட்டு வருகிறார். தைரியமாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்... எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சியை போன்று தற்போது பாஜக உள்ளது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை" என்று கூறியிருந்தார்.

சீனியர் தலைவர்
அன்றைய தினம் தமிழகத்தின் அமைச்சராக இருந்தவர், மாற்று கட்சிக்கு சென்றாலும் திராவிட முகத்தினை இன்றுவரை இழக்காதவர், அதிலும் ஒரு சீனியரே இப்படி பேசலாமா என்ற அதிர்ச்சிதான் அதிமுக மேலிடத்தில் அப்போது எழுந்தது.. இதற்கு அண்ணாமலை, பணிந்து வந்து வருத்தம் தெரிவித்தாலும், அதிமுக நயினார் பேச்சை இப்போது வரை மறக்கவில்லை.. நகர்ப்புற தேர்தலில் கூட்டணி வைக்க முடியாத அளவுக்கு வெறுப்பை கக்கியது..

எடப்பாடி பழனிசாமி
ஆனாலும், பாஜக தன்னை திருத்தி கொள்ளவில்லை.. திமுகவை கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறாரோ, அண்ணாமலை தினமும் திமுகவை சாடி வருகிறார்.. விமர்சித்து வருகிறார்.. போராட்டங்களை அறிவித்து திமுக தரப்புக்கு எரிச்சலை கூட்டி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு தகவல், அதிமுகவில் பற்றி கொண்டு எரிகிறது.

கேப்டன் தமிழ்செல்வன்
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில்கள் நின்று செல்வது உறுதிசெய்யப்பட்டு, ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.. இதனை மகாராஷ்டிரா மாநில எம்எல்ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன் கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார்... அப்போது பேசிய எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் அண்ணாமலை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அண்ணாமலை
"தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருகிறது... அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு போல சிறப்பாக செயல்பட்டு வருகிறார்... அதிமுக எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை... திமுக ஆட்சியில் என்னென்ன நடக்கக்கூடாத விஷயங்கள் நடக்கிறதோ, அதை எதிர்த்துக் கேட்கக்கூடிய சக்தி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் மட்டும்தான் இருக்கிறது. அவருடைய வேலையை மக்கள் விரும்புகிறார்கள்...

ஆளுநர் ரவி
கவர்னர் பொதுவானவர், எந்தக் கட்சிக்கும் சொந்தமானவர் கிடையாது.. இந்த திமுக மட்டும்தான் கருப்பு கொடியை காட்டிக் கொண்டிருக்கிறது... காரணம், திமுகவினர் மனசில் பூரா அழுக்கு இருக்கு.. நிறைய பிரச்சனைகள் அவர்கள் மீது உள்ளது.. அதனால்தான், கவர்னர் முன்னாடியே உட்காருவதற்கு பயப்படுகிறார்கள்.. இதுதான் உண்மை" என்றார்.. தமிழ்செல்வன் எம்எல்ஏ திமுவை பேசியது ஒருபக்கம் இருந்தாலும், சந்தடி சாக்கில் எடப்பாடி பழனிசாமியை போட்டு தாக்கியதுதான் தற்போதைய ஹாட் பேச்சாக ஓடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications