எடப்பாடிக்கு ஓகே சொன்ன பாஜக! ஆனாலும் ஒரு சிக்கல்! 4 பேர் ஒன்றாக இருந்தால்.. நயினார் போட்ட கண்டிஷன்!
சென்னை : யார் தலைமையில் கூட்டணி என்பதை விட,அதிமுக-பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் எனவும், அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து இருப்பதை விட ஒன்றிணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும் என பாஜக சட்டமன்ற குழுதலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பாஜக, அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென்பதை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்க.. முடியவே முடியாது என பேசினார் ஓபிஎஸ்.
ஆனாலும் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாகை பாஜக-திமுகவினர் திடீர் மோதல்..பாய்ந்து பாய்ந்து தாக்கிய நிர்வாகிகள்.. பதற்றம்-போலீஸ் குவிப்பு
அதிமுக மோதல்
யாருக்கு அதிகாரம் என தீர்மானித்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக மாறி மாறி தீர்ப்புகள் வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் இருவரின் அரசியல் எதிர்காலமே இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தங்கள் தரப்புக்கு தான் சாதகமாக தீர்ப்பு வரும் என இரு தரப்புமே தீர்மானமாக இருக்கும் நிலையில் காலத்தின் கைகளில் தான் எல்லாமே உள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பேச்சுகளும் உலா வரத் துவங்கி இருக்கின்றனர்.
பாஜக பேச்சுவார்த்தை
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக மேலிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இரட்டை தலைமையை ஏற்றுக் கொண்டால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய தயார் என ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டினாலும், விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி. ஓபிஎஸ் இல்லாமலேயே கட்சியை தன்னால் வழி நடத்த முடியும் எனவும், வரும் தேர்தலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என கூறி வருகிறார்.
உரசலால் சிக்கல்
2024ஆம் ஆண்டு தான் தேர்தல் என்றாலும் தற்போதே பல பாஜக மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். பாஜக அதிமுகவையே நம்பி இருக்கும் நிலையில் இருவரின் உரசலால் பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள பாஜக தலைமை இருவரை ஒன்றிணைய வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல பாஜக தலைவர்கள் தொடர்ந்து அதிமுக இணைப்பை வலியுறுத்தி வரும் நிலையில், இந்த பேச்சுகள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
நயினார் நாகேந்திரன்
இந்நிலையில், அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து இருப்பதை விட ஒன்றிணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும் என பாஜக சட்டமன்ற குழுதலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். வ.உ.சிதம்பரனாரின் 86 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பிரச்சினை இல்லை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,"பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை அமைப்பு ரீதியான பணிகளை நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்து வருகிறோம். அதிமுக பாஜக கூட்டணி என்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை யார் தலைமையில் கூட்டணி என்பதிலும் எந்தவிதமான பிரச்சனை இல்லை. அதிமுகவில் பிரிந்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் பலம். அதிமுகவின் அனைத்து தரப்பு ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது.
சூழல் மாறலாம்
தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணியை வைக்க கூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்" என்றார்.
எதிர்வினை
இதன் மூலம் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும், அனைவரும் ஒன்றாக இருந்தால் இன்னும் பலம் கிடைக்கும் என பாஜக தலைமையின் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக பேச்சைக் கேட்க ஓபிஎஸ் தயாராக இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் தரப்பு அதிருப்தியில் இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் இதற்கான எதிர்வினை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.