ஓ செஸ் ஒலிம்பியாட் உங்க நிதியா.. சரி தடுப்பூசி திட்டத்தில் பிரதமர் படம் இல்லையே ஏன்?.. பாஜக கேள்வி
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி மாநில அரசின் நிதி என்பதால் பிரதமர் மோடியின் படம் விளம்பரங்களில் வைக்கப்படவில்லை என வாதம் முறையற்றது என பாஜக நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டி குறித்த விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலினின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
ஆனால் பிரதமர் மோடியின் பெயரோ புகைப்படமோ ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை. இதுகுறித்து பாஜக கேள்வி எழுப்பியது. மத்திய அரசு எடுத்த முயற்சியால்தான் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது என்பது பாஜகவின் வாதமாகும்.

பாஜக இளைஞரணி
எனினும் நேற்றைய தினம் பாஜக இளைஞரணியை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி செஸ் ஒலிம்பியாட் விளமபரங்களில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை ஒட்டினார். இதுகுறித்து திமுகவினர் கூறுகையில் செஸ் ஒலிம்பியாட் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியால் நடத்தப்படுகிறது. இப்படியிருக்கும் போது மற்றவர்களின் (பிரதமரின் படம்) படங்களை ஏன் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தது.

பாஜக நாராயணன்
இதுகுறித்து பாஜக நாராயணன் கண்டனம் தெரிவித்து தனது தொடர் ட்வீட்டில் கூறுகையில், பிரதமரின் படம் சதுரங்க ஒலிம்பியாட் விளம்பரங்களில் இடம் பெறாதது ஏன் என்ற கேள்விக்கு, இது மாநில அரசு நிதியில் நடைபெறுகிறது, அதனால் அவசியமில்லை என்கிறார்கள் தி மு க வினர். இது முறையற்ற வாதம். அப்படியானால், தடுப்பூசிகள் முழுவதையும் மத்திய அரசே அளித்த நிலையில், தமிழகத்தில் அது குறித்த விளம்பரங்களில் முதலமைச்சர் படம் இடம் பெற்றது என்பதோடு, பிரதமரின் படம் இடம் பெறவில்லையே?

தவறுதானே
அது தவறு என்று ஒப்பு கொள்வார்களா? தடுப்பூசி குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் படம் இடம்பெற்றது ஏன் என்று நாம் கேட்கவில்லை, பிரதமரின் படம் தவிர்க்கப்பட்டது ஏன் என்று தான் கேட்டோம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பிரதமர் இருட்டடிப்பு செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது மலிவான அரசியலே.

சதுரங்க போட்டி
சதுரங்க போட்டிகளை பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்காணித்து கொண்டிருப்பார்கள் என்பதால், உலகமே கொண்டாடும் நம் பிரதமரை அழைத்து துவக்குவது , கௌரவம் என்று கருதி அழைக்கும் தி மு க அரசு, அவருக்கு உரிய மரியாதையை அளிக்க தவறுவதை தான் நாம் சுட்டி காட்டுகிறோம்.கூட்டாட்சி தத்துவம் என்று எப்போதும் துள்ளிக்குதிப்பவர்கள், பிரதமரின் படம் இடம் பெற்றால் முதல்வரின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற அச்சத்தில் அவரை தவிர்ப்பது மலிவான அரசியலே.

நிர்வாக வசதி
எப்படி, ஒரு மாநிலம் தன் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது, அதே போல் இந்தியா தனது நிர்வாக வசதிக்காக தான் மாநிலங்களை உருவாக்கியது என்பதையும், இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களை மேலும் உருவாக்க்கி கொள்ளும். அதிகாரம் படைத்தது என்பதையும், கூட்டாட்சி என்பது ஒருவழிப் பாதையல்ல, இரு வழிப்பாதை என்பதையும் திராவிட முன்னேற்ற கழகம் மறந்து விடக்கூடாது என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications