அமர் பிரசாத் ரெட்டி கைது! செந்தில் பாலாஜி விவகாரத்தை கையில் எடுத்த பாஜக பிரபலம்! ஏன் என்னாச்சு?
சென்னை: பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டதற்கு அந்த கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் உள்ளது. அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள சுமார் 50 அடி உயர பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதன் பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அந்த கொடிக் கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்திருந்தனர். இதை அறிந்த 500 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடி கம்பத்தை அகற்றவிடாமல் ஜேசிபியின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர், பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித சுமுகமான உடன்பாடும் எட்டப்படாத நிலையில் பாஜகவினரை குண்டுகட்டாக கைது செய்து நீலாங்கரை, பனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.
இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடி கம்பத்தை போலீஸார் அகற்றினர். அப்போது போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆபாசமாக பேசுதல் ஊழியர்களை பணிச் செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அங்கு போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததாக தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி கைதுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்;- தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அவர்களையும், தமிழக நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, திமுகவின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பாஜகவினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டால் குற்றம் புரிந்தவர்கள் என்றால், செந்தில் பாலாஜியும் குற்றம் புரிந்தவர் தானே? பின் ஏன் இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications