“பூதம்” மீது பாஜக நாராயணன் போலீஸ் புகார்! இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியதாக கூறி "பூதம்" என்ற ட்விட்டர் கணக்கின் மீது பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆன்லைனில் போலீஸ் புகார் அளித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ட்விட்டரை பயன்படுத்தும் பலரும் "பூதம்" என்ற பெயரில் இயக்கும் ட்விட்டர் கணக்கு மிகவும் பிரபலம். நடிகர் விக்ரமின் புகைப்படத்தை டிபியாக வைத்திருக்கும் இந்த கணக்கில் பாஜகவையும், இந்துத்துவத்தையும் விமர்சித்து தொடர்ந்து பல்வேறு பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த பதவிகள் ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த ட்விட்டர் கணக்கில் இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறி அதன் மீது போலீசிடம் ஆன்லைனில் புகாரளித்து இருக்கும் தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. இதுகுறித்து அவர் அளித்து இருக்கும் புகாரில் பூதம் ட்விட்டர் கணக்கில் மூன்று பதிவுகளை சுட்டிக்காட்டி கருத்திட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "நான் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறேன். அப்போது நான் ட்விட்டரில் கடந்த மே 2 ஆம் தேதி பூதம் என்று பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு இருந்த பதிவை வாசித்தேன். அதில் 3 பதிவுகள் இணைக்கப்பட்டு இருந்தன.
அந்த ட்விட்டர் பதிவுகள் தெளிவாக இந்து மதத்தை பின்பற்றுவோரின் உணர்வுகளை துன்புறுத்தும் வகையில் உள்ளன. அவர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்று இலக்கு வைத்து வெளியிடப்பட்டு உள்ளது. இந்து மதத்தினுடைய பல்வேறு வகையான கடவுள்களை இழிவுபடுத்தி சித்தரிப்பதன் மூலம் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை அவர்கள் செய்து உள்ளார்கள் என்பதை இந்த பதிவுகளை பார்க்கும்போது அறியலாம்.
இந்த பதிவர் பல்வேறு ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்து மத கண்ணோட்டத்துடன் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி சமூகத்தில் இந்து கடவுள்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் ஒற்றை நோக்கத்துடன் இந்த பதிவுகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். பகைமையான சூழலை உருவாக்குவதன் மூலமாக பல்வேறு பிரிவு மக்களிடையே அமைதியின்மையை உருவாக்குவதன் மூலமாக தெளிவாக தெரிகிறது.

இந்த ட்விட்டர் கணக்கு முகம் தெரியாத நபரால் இயக்கப்படுகிறது. பதிவுகளில் மட்டுமின்றி அதற்கு அவர் அளிக்கும் பதில்களும் மோசமாக உள்ளது. அவையும் இந்து மதத்தையும் புண்படுத்துகிறது. முகம் தெரியாத இந்த கணக்கில் இருந்து விஷத்தை கக்குவதற்கு சமூக வலைதளத்தை அவர் பயன்படுத்துகிறார்.
பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் ஒற்றை நம்பிக்கைகளை கொண்ட மக்களிடையே பகையை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலை அவர் அரங்கேற்றுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இனி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

நாராயணன் பகிர்ந்து இருக்கும் பூதம் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு உள்ள 3 பதிவுகளில், பேராசிரியர் ஜே.எல்.சாஸ்திரி எழுதிய தி சிவ புராணம் பகுதி 3 என்ற புத்தகத்தின் பக்கங்களும், அதற்கான தமிழ் மொழி பெயர்ப்புகளும் இடம்பெற்று இருக்கின்றன. அதில் தனது பதிவுக்கான ஆங்கில வரி மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications