"ஸ்டாலினை கவனிச்சீங்களா".. புட்டு புட்டு வைத்த நாராயணன்.. திமுகவை விரட்டி விரட்டி வரும் பாஜக.. ஏன்?
பாஜக திருப்பதி நாராயணன் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து டேமேஜ் செய்யும் முயற்சியில் தமிழக பாஜக வேகம் எடுத்து வருகிறது.. இந்த லிஸ்ட்டில் முதலில் நிற்பவர் பாஜகவின் நாராயணன் திருப்பதிதான்..!
மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி, கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தார்...
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு, திராவிட மாடல் என தொடங்கி தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பது வரை பல்வேறு விஷயங்களை பிரதமரின் மேடையிலேயே பேசினார்..

ஆவேச அண்ணாமலை
முதல்வரின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்... அதிலும் அண்ணாமலை கொந்தளித்து போயுள்ளார். பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்.. எப்படி ஜிஎஸ்டி கவுன்சில் நடக்கிறது என்பது கூட தெரியாமல், முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போலாகிறது என்றெல்லாம் ஆவேசத்துடன் கூறியிருந்தார்...

ஏற்றுமதி - இறக்குமதி
மோடி டெல்லி சென்று இத்தனை நாள் ஆகியும், தமிழக பாஜக இந்த விவகாரத்தை இன்னும் மறக்கவில்லை.. அந்த வகையில், பாஜகவின் திருப்பதி நாராயணன், தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறார்.. அதிலும் அந்த ஒரு விழாவை வைத்தே திமுகவை டேமேஜ் செய்தும் வருகிறார்.. அன்று சென்னையில் நடந்த விழாவில், பிரதமரை மேடையில் வைத்து கொண்டு, முதல்வர் சொன்ன திராவிட மாடல்தான் பலராலும் கவனிக்கப்பட்டது..

திராவிட மாடல்
இதற்கு நாராயணன்தான் முதலில் பதில் தந்தார்.. "குடியை கொடுத்து, குடியை கெடுத்ததுதான் திராவிட மாடல் என்றும், அப்போது கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, இப்போது அதை மீட்க வேண்டும் என கூக்குரலிடுவதுதான் திராவிட மாடலா? என்றும், ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என்று பலமுறை கூறி புளகாங்கிதம் அடைந்தது குன்றிய அரசு' என்றும் ட்வீட் போட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

மூப்பனார்
அதேபோல, நாட்டின் குடியரசுத்தலைவர்களையும், பிரதமர்களையும் உருவாக்கியவர் கருணாநிதி என்று மு.க. ஸ்டாலின் நெகிழ்வுடன் மேடையில் பேசியிருந்தார்.. இதையும் நாராயணன் விட்டுவைக்கவில்லை.. "தமிழன் (அப்துல் கலாம்) குடியரசுத்தலைவராக கூடாது என்பதற்காகவும், தமிழன் (மூப்பனார்) பிரதமராக கூடாது என்பதற்காகவும்??" என்று நறுக்கென பதிவிட்டார்... இப்போது மறுபடியும் திமுகவை சீண்டி உள்ளார்.. அது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்..

உற்பத்தி வரி வருவாய்
அந்த அறிக்கையில், "நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 9 சதவீதம், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 6 சதவீதம், மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம், ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம், கார் ஏற்றுமதியில் 32.5 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே என்று, பிரதமர் பங்கேற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.. உள்நாட்டு உற்பத்தியையும், வரி வருவாயையும் ஒப்பிட்டு பேசுவதே தவறானது.

வரிவருவாய்
பல புள்ளிவிவரங்களை குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், விவசாய உற்பத்தியில் முதல்10 மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பதை குறிப்பிடாதது ஏன்? நாட்டின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், 5 மாநிலங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.6 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. 8 வடகிழக்கு மாநிலங்களின் பங்கீடு 2.8 சதவீதம் மட்டுமே. விகிதாச்சார அடிப்படையில் வரி வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையாது என்பது கண்கூடு.

உடம்பு வீக்கம்
இந்தியாவுக்கு தேவை வளர்ச்சிதானே தவிர, வீக்கம் அல்ல. வாழ்வோம், வாழ வைப்போம் என்பதே தமிழர் பண்பாடு. இதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.. ஒரு மனிதனின் அங்கங்களில் கையோ, காலோ மட்டும் வீங்கியிருந்தால் அதற்கு பெயர் வீக்கம். ஆனால் ஒட்டுமொத்த உடம்பே வளர்ச்சியடைந்தால் அது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு, இந்தியாவிற்கு தேவை வளர்ச்சி தானே தவிர வீக்கம் அல்ல. வாழ்வோம், வாழ வைப்போம் என்பதே தமிழர் பண்பாடு என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா? என்று நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்... ஆக, பிரதமர் கலந்து கொண்ட அந்த ஒரே ஒரு விழாவை மையப்படுத்தி, இன்னும் என்னவெல்லாம் திமுகவை கேள்வி எழுப்ப பாஜக முடிவு செய்துள்ளதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications