எந்த சம்பவத்தை சொல்றீங்க? “பயமுறுத்தாதீங்க”- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்டை கிண்டல் செய்த பாஜக நாராயணன்!
சென்னை : சென்னை தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் கூறிய கருத்தை பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.
சென்னை மாநகரம் உருவாகி நேற்றுடன் 383 ஆண்டுகளாகின்றன. இதையொட்டி, அரசு சார்பில் சென்னை நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
அதனை கிண்டல் செய்யும் வகையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "நேற்று மாலை பெய்த சிறு மழையால் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் நிரம்பி அவை மரணப்பள்ளங்களாக மாறி விட்ட சம்பவத்தை சொல்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிறைய சம்பவம் இருக்கு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் கருணாநிதி. அதற்கு இன்றைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல், இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கிறது என்பதில் பெருமை. நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம். காத்திருங்கள்!" எனத் தெரிவித்திருந்தார்.

அந்த சம்பவத்தை சொல்றீங்களா?
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை சென்னையில் செய்யப் போறோம்; காத்திருங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின். காத்திருப்பதா? நேற்று மாலை பெய்த சிறு மழையால் சென்னையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மழை நீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் நிரம்பி ஓடுவதால் அவைகள் மரணப்பள்ளங்களாக மாறி விட்ட சம்பவத்தை சொல்கிறீர்களா?

பயங்கர சம்பவம்
நேற்று இரவு பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கிய பயங்கர சம்பவம் நடைபெற்றதை சொல்கிறீர்களா? தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளித்து கொண்டிருக்கும் கொடூர சம்பவத்தை சொல்கிறீர்களா? பாதுகாப்பு விதிகளே கடைபிடிக்கப்படாமல் தோண்டிய பள்ளங்களினால் பாதசாரிகளுக்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் பயங்கர சம்பவங்களை சொல்கிறீர்களா?

சம்பவம் போதும் ஐயா
அல்லது அந்த பணியாளர்களால் தினந்தோறும் கழிவு நீர் குழாய்களும், மின் இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்படும் அவல சம்பவங்களை சொல்கிறீர்களா? போதும் ஐயா போதும்! நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து, மேலும் பல சம்பவங்களை சென்னையில் செய்யப்போகிறோம் என்று பயமுறுத்தாதீர்கள் ஐயா! சென்னை வாசிகளால் தாங்க முடியாது" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications