செந்தில் பாலாஜிக்கு சக்ஸஸ்.. பாஜக நிர்மலுக்கு வைக்கப்பட்ட "செக்".. பேச கூடாது.. கோர்ட் போட்ட ஆர்டர்!
சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பாஜக நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக தலைவர்களுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக தலைவர் அண்ணாமலை சாராய அமைச்சர் என்று அழைத்து வருகிறார்.

விமர்சனம்
அதேபோல் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் நிர்மல் குமார் பேசி இருந்தார். அதில் டாஸ்மாக் கொள்முதலில் ஊழல் நடைபெற்று உள்ளது. இதன் மூலம் அமைச்சர் பணம் பெற்றுள்ளார் .

ஆதாரங்கள் இல்லை
ஆதாரங்கள் இன்றி அமைச்சர் மீது வரிசையாக இவர் புகார்களை வைத்தார். அமைச்சர் இந்த ஊழல் காரணமாக ஆதாயம் அடைந்து உள்ளார் என்றும் நிர்மல் கூறினார். ஆதாரங்களை சமர்பிக்காமல் நிர்மல் குமார் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இதை அவர் ட்விட்டாகவும் போட்டு இருந்தார். இந்நிலையில், தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை வழக்கு
முன்னதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆதாரம் இன்றி எனக்கு எதிராக அவதூறு பரப்பி உள்ளார். அவர் பொய் சொல்கிறார். இதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

விசாரணை
இதையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அவதூறு பேச்சு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தம்மை பற்றி நிர்மல்குமார் அவதூறாக பேசிவருவதாக கூறினார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மனு குறித்து நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்












Click it and Unblock the Notifications