அதிமுக கூட்டணியில் பாஜக இல்லவே இல்லை- ரெய்டு பூச்சாண்டி பயமே இல்லை- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்கிற முடிவில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அண்ணா திமுக கூட்டணியில் பாஜக இல்லை என கடந்த செப்டம்பர் 18-ந் தேதி முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்கிற நிலைப்பாட்டில் எந்த மாறுபாடும் இல்லை.

மா.செ.க்கள் கூட்டம்: சென்னையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் இதைத் தவிர வேறு எதனையும் நான் சொல்வது சரியாக இருக்காது. நாளைய கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
டெல்ல் பயணம் ஏன்?: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்த பிறகு டெல்லிக்கு அதிமுக தலைவர்கள் சென்றது, தமிழகம் சார்ந்த பிரச்சனைகளுக்குதான். டெல்லிக்கு சென்றவர்களில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இருந்தனர். கூட்டணி குறித்து மத்திய அரசிடம் என்ன போய் பேசப் போகிறோம்.
ரெய்டு பூச்சாண்டிகள்: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக எத்தனையோ சோதனைகள், வழக்குகளை எல்லாம் பார்த்துவிட்டது. ரஜினிகாந்த் சொல்வதைப் போல... எங்களுக்கு மடியில் கனமில்லை. இந்த ரெய்டு போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எதையும் தீவிரமாக எதிர்கொள்வோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
நடந்தது என்ன?: முதலில் ஜெயலலிதாவையும் பின்னர் அண்ணாவையும் விமர்சித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. ஜெயலலிதா குறித்த விமர்சனத்துக்காக அதிமுக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. அண்ணா குறித்த சர்ச்சையில் அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் எச்சரித்தனர். ஆனாலும் அண்ணாமலை தமது கருத்தில் உறுதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இல்லை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பகிரங்கமாக அறிவித்தார்.
அண்ணாமலை மிரட்டல்: அதன்பின்னர் திடீரென அதிமுக தரப்பில் செல்லூர் ராஜூ போன்றோர் சமாதான கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனையும் அண்ணாமலை ஏற்கவில்லை. அத்துடன் ரெய்டு நடக்கும் என்கிற தொனியில் அதிமுக தலைவர்களை அண்ணாமலை மிரட்டி இருந்தார்.
டெல்லி ஏமாற்றம்: இதையடுத்து அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு சென்றனர். ஆனால் பாஜக மேலிடமோ அண்ணாமலையை மாற்றவே முடியாது என திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
ஜெயக்குமார் திட்டவட்டம்: இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் மீண்டும் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லவே இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அத்துடன் ரெய்டு பூச்சாண்டிகளுக்கும் எல்லாம் பயப்படமாட்டோம் எனவும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications