பாஜக எங்களை அதிகாரம் செய்யமுடியாது.. “அவர்கள்” சொல்லி கேட்கும் நிலை இல்லை.. என்ன இப்படி பேசிட்டாரு!?
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால், கட்சி ஒன்றாக இணைந்ததைப் பார்த்து மகிழ்வேன் என புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை : எங்களுக்கு பாஜகவோ, அண்ணாமலையோ உத்தரவு போட முடியாது, அதனை எங்கள் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் சொல்வதை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் எங்களை அதிகாரம் செய்ய முடியாது. பாஜக சொன்னதற்காகவோ, அண்ணாமலை சொன்னதற்காகவோ, எங்கள் வேட்பாளரை நாங்கள் வாபஸ் பெறவில்லை." என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்று, இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காக உழைக்கப்போவதாக கூறியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தல் களம் பற்றி நமது ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் ஓபிஎஸ் அணியின் புகழேந்தி.

நெருப்புக்களம்
கேள்வி : இரட்டை இலை சின்னம் தோல்வியடைக்கக் கூடாது என்பதற்காக விட்டுக்கொடுத்ததாகச் சொல்கிறீர்கள்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தின் தோல்வியைத் தவிர்க்க முடியுமா?
பதில் : எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறார். திமுக அரசு விடியா அரசு என்று முழக்கமிட்டு போராட்டங்களை நடத்தி வருபவர்கள் இந்த இடைத்தேர்தலிலாவது தங்களை நிரூபித்து திமுகவை வீழ்த்த வேண்டிய நெருப்புக்களம் இது. அக்னிப் பிரவேசமாக உள்ளே நுழைந்து இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ்ஸை அழைத்தால் அவர் உள்ளே வருவார். மீண்டும் அவதூறாகப் பேசினால் புகழேந்தி தான் வருவார்.

தலைவணங்கி நிற்கிறோம்
கேள்வி : எடப்பாடி பழனிசாமியை துரோகிகள் என விமர்சிக்கிறீர்கள். கடைசியில் இரட்டை இலை சின்னத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டீர்கள்.. அதற்கு நீங்கள் சின்னத்தை முடக்கியே இருக்கலாமே?
பதில்: உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயல்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கள் மீது தொடரப்படுவது மட்டுமல்லாமல், நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் பொதுக்குழு வழக்கிலும் சிக்கல் ஏற்படும். ஆகவே, நீதி தேவன் முன்னால் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். அதற்காக இப்போது விட்டுக் கொடுத்திருக்கிறோம்.

பாஜக எங்களை அதிகாரம் செய்ய முடியாது
கேள்வி : அவைத்தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை நாட நீங்கள் திட்டமிட்டதாக தகவல்கள் வந்தன. பின்னர், பாஜக தலையீடு காரணமாகவே முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறதே?
பதில் : ஓபிஎஸ், பிரதமர் மோடிக்கு வேண்டியவர் தான். அண்ணாமலை போன்றவர்கள், எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள், பொதுவான வேட்பாளரை நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். இவ்வளவுதான் அவர்கள் சொல்ல முடியுமே தவிர, எங்களுக்கு பாஜகவோ, அண்ணாமலையோ உத்தரவு போட முடியாது, அதனை எங்கள் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் சொல்வதை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் எங்களை அதிகாரம் செய்ய முடியாது. யாரும் எங்களை மிரட்ட முடியாது என்று ஓபிஎஸ் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். பாஜக சொன்னதற்காகவோ, அண்ணாமலை சொன்னதற்காகவோ, எங்கள் வேட்பாளரை நாங்கள் வாபஸ் பெறவில்லை.

கைவிட்டதா பாஜக?
கேள்வி : ஓபிஎஸ், பாஜகவை பெரிதும் நம்பி இருந்தார், ஆனால், பாஜக அவரைக் கைவிட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே?
பதில் : பாஜகவுக்கு இதில் என்ன வேலை? அதிமுகவை சேர்த்து வைத்து பஞ்சாயத்து செய்யும் வேலையையா பாஜக பார்த்துக் கொண்டிருக்கும்? எல்லா மாநிலங்களையும் போல இங்கும் வலுவாக நுழைவதற்கான திட்டத்தில் தான் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தயவையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் போராட்டமெல்லாம், எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி சென்றால் சர்வாதிகாரமாக மாறிவிடும், ஜெயலலிதா வகித்த பதவியில் ஈபிஎஸ் வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். தொடர்ந்து போராடுவோம்.

காப்பாற்றுவோம்
கேள்வி : போராட்டக் களத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறதே? புகழேந்தியும் வெளியேறுகிறாரா?
பதில் : தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும், பணி செய்து கிடப்பதே என் கடன் என்பதைப் போல, போராடிக் கொண்டிருப்பதே எனது கடமை. எனக்குக் கவலையே இல்லை. என்னிடம் உண்மையும் நேர்மையும் இருக்கிறது. யாரையும் நான் ஏமாற்றிவிட்டேன் என்று எவராலும் குற்றம்சுமத்த முடியாது. ஜெயலலிதாவுக்கு பிணை கொடுத்தேன். இந்த இயக்கத்தில் தியாகத்தை மட்டுமே சந்தித்த தொண்டர்களில் நானும் ஒருவன். இந்தக் கட்சியை காப்பாற்றுவோமே தவிர, யாருக்கும் அடமானம் வைத்து அடிமைகளாக மாட்டோம்.

மோடி - ரவீந்திரநாத்
கேள்வி : சமீபத்தில் ஓபி ரவீந்திரநாத், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோது, ஓபிஎஸ் தரப்புக்கு அவர் ஒரு உறுதிமொழி தந்ததாக ஒரு தகவல் பரவுகிறதே? அது என்ன உறுதிமொழி?
பதில் : பிரதமர் மோடி, இப்படியான உறுதிமொழிகளை எல்லாம் யாருக்கும் கொடுக்கமாட்டார் என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். பிரதமர் மோடியிடம் ரவீந்திரநாத் என்ன பேசினார் என்று தெரியாத நிலையில் அதுபற்றி கருத்துச் சொல்வது தவறாகிவிடும்.

திமுகவில் சேருவீர்களா?
கேள்வி : நீங்கள் பேசுவதைப் பார்க்கும்போது திமுக மீது மென்மையான நிலைப்பாட்டை எடுப்பது போல் தெரிகிறதே.. திமுகவில் சேரும் திட்டம் இருக்கிறதா?
பதில் : நான் திமுகவில் சேர வேண்டுமென்றால் எப்போதோ சேர்ந்திருப்பேன். என்னை யார் தடுக்க முடியும்? 2 விஷயங்கள். எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றாமல் விட்டுப்போன விஷயங்களை ஆட்சிக்கு வந்ததும் திமுக நிறைவேற்றியது. சில நன்மைகளைச் செய்ததோடு, வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்களுக்கு துயரங்களையும் கொடுத்துள்ளது. திமுக - அதிமுக இடையேயான அரசியல் நிலைப்பாடுகள் எதிரெதிரே இருந்தால் தான் இந்த திராவிட சித்தாந்த ஆட்சி தொடரும். எங்கேயாவது ஒரு பக்கம் வீழ்ந்துவிட்டால் தேசியக்கட்சிகள் உள்ளே நுழைந்துவிடும்.

உத்தரவாதம் இல்லை
கேள்வி : ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் ஒன்றாக இணைந்து விட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
பதில் : ஒன்றும் செய்ய முடியாது. ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஓபிஎஸ் இருக்கும் முக்கியமான நிர்வாகிகள் அண்ணன் ஈபிஎஸ் என்று பேசுகிறார்கள். நான் பேசவே இல்லை. எடப்பாடி பழனிசாமியை துரோகி, கோமாளி என்று விமர்சித்திருக்கிறேன். எட்டப்பன், சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றவர் என்று பேசியிருக்கிறேன். நாளை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால், என்னை நடுத்தெருவில் நிறுத்தினாலும், கட்சி ஒன்றாக இணைந்ததைப் பார்த்து மகிழ்ந்து, அந்தப் பெருமையோடு வீட்டுக்குச் சென்றுவிடுவேன். என்னை காத்து நிற்பார்கள் என்பதற்காக அல்ல, கொண்ட கொள்கைக்காகவே நிற்கிறேன். ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கப்பட்ட நான் இதற்கெல்லாம் உத்தரவாதம் அளிக்க முடியாது. மக்களோடு மக்களாக என்றும் நிற்பேன்.

சுயநலம் இல்லை
கேள்வி : உங்களை கட்சியை விட்டு நீக்கியவர்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தான். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த நீங்கள் இப்போது ஓபிஸ் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டீர்களா?
பதில் : என்னை கட்சியிலிருந்து நீக்கியது தவறு. ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் குற்றம்சாட்டி வழக்கு போட்டேன். எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக நான் ஓபிஎஸ் பக்கம் நிற்கவில்லை. சர்வாதிகார போக்கோடு ஒற்றைத் தலைமையாக வர எடப்பாடி பழனிசாமி துடிப்பது, கட்சிக்கும், தொண்டர்களுக்கும் ஆபத்து என்பதாலேயே, அவரை எதிர்த்து நிற்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக யார் முடிவெடுத்தாலும் அவர்களோடு நான் பயணிக்க மாட்டேன். அதற்கு என் மனசாட்சி ஒப்புக்கொள்ளாது.
இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார் புகழேந்தி.












Click it and Unblock the Notifications