எந்த பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கும் திமுக-காங்கிரஸ்.. கலக்கத்தில் பாஜக
திமுக-காங்கிரஸ் கூட்டணியை குழப்ப பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: காங்கிரசும், பாஜகவும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லைதான்.. இவர்களுக்கு டஃப் கொடுத்து அரசியலை முன்னெடுத்து செல்கிறது திமுகவும்!
கேசிஆர் சென்னை வர போவதாக போன வாரம் சொன்னதில் இருந்தே தமிழக அரசியல் மட்டுமில்லாமல் இந்திய அரசியலே ஆடித்தான் போனது! இதற்கு காரணம் 3-வது அணி அமைக்க ஒவ்வொருத்தரிடமும் ஆதரவு தேடி கேசிஆர் வந்து கொண்டிருப்பதுதான்.
3-வது அணிக்கான ஆதரவை தேடி வருவதாக சொன்னாலும், அதை யாராலும் முழு மனசாக ஏற்க முடியவில்லை.
நான் செத்தால் கூட அப்படி பேச மாட்டேன்.. மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்!
மறைமுக கூட்டணி
இதற்கு காரணம், "மூன்றாவது அணி அமைக்க சந்திரசேகரராவ் முயற்சிக்கவில்லை என்றும், மாறாக இவரை பாஜகதான் பின்னால் இருந்து இயக்குகிறது, மறைமுகமாக பாஜக கூட்டணி குறித்து பேச சந்திர சேகரராவை அனுப்பி வைத்துள்ளது" என்றும் சொல்லப்படுகிறது. அதாவது பாஜகவின் தூதுதான் கேசிஆர் என்ற வாதம் நிலைத்து நிற்கிறது.
விளக்கம்-அறிக்கை
இதையடுத்துதான் இந்த சந்திப்பு நடந்து முடிந்தது. ஒரு மணி நேரம் பேசியும் கேசிஆரும், ஸ்டாலினும் என்ன பேசினார்கள் என்று இதுவரை சொல்லவே இல்லை. இந்த சந்தர்ப்பத்தைதான் எதிர்க்கட்சிகள் எளிதாக பயன்படுத்தி பேச ஆரம்பித்தன.
நிரூபணம்
குறிப்பாக தமிழிசை இதை அதிகமாக கிண்டி கிளறிவிட்டார். திமுக-பாஜகவுடன் பேசுகிறது என்று சொன்னார். குற்றஞ்சாட்டிய வேகத்திலேயே அதை திமுக மறுத்தது.. விளக்கம் அளித்தது! ஆனாலும் தமிழிசை தன் பிடியில் உறுதியாக இருக்கிறார். நேரம் வரும்போது நிரூபிப்பேன் என்றும் திடமாகசொல்லி வருகிறார்.
குழப்பங்கள்
எதற்காக கேசிஆர் இங்கே வந்தார்? என்னதான் பேசினார்? ஏன் திடீரென்று திமுக மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு? என்றெல்லாம் யோசனை வருகிறது. ஆனால் இவையெல்லாம் பாஜகதான் செய்கிறதோ என்றும் ஒரு சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் கிளப்பப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸை குழப்பவும், திமுக மீதான நம்பகத்தன்மையை குறைக்கவுமே இப்படி ஒரு வேலையை கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அரசியல் கணக்கு
"பாஜகவுடன் திமுக பேச்சுநடத்தி வருகிறது, அதனால்தான் கேசிஆர் வந்து போனார்" என்றெல்லாம் சொல்வதால், உண்மையிலேயே காங்கிரஸ் குழம்பும் என பாஜக கணக்கு போடுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும், திமுகவின் பெயர் கெடும், இது காங்கிரஸை பாதிக்கும், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தனியாக கழண்டு வரும், என்பதுதான் அரசியல் கால்குலேஷன்!
தெளிவு
ஆனால் பாஜகவின் இந்த பக்கா பிளான்களை எல்லாம் ஒரே நாளில் புஸ்ஸென ஆக்கிவிட்டார்கள் ஸ்டாலினும், சோனியாகாந்தியும்! ஒரு பக்கம் துரைமுருகனை உடனடியாக சந்திபாபுநாயுடுவிடம் அனுப்பி, திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகதான் உள்ளது என்ற நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் முக ஸ்டாலின்!
அனைத்து கட்சி கூட்டம்
மற்றொரு பக்கம் வருகிற 23-ம் தேதி, நடக்க போகும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகளான பிஜு ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக தலைமை
சோனியாவின் இந்த அழைப்புதான் இப்போது பாஜக தலைமையை கிறுகிறுக்க வைத்துள்ளது. பாஜக பந்து எப்படி போட்டாலும் அதை திருப்பி வாங்கி பவுண்டரிகளை அடித்து வருகிறது திமுகவும், காங்கிரசும்! பார்ப்போம் இன்னும் என்ன போகிறது என்று?!