ஓபிஎஸ், டிடிவி, பாஜக மொத்தமா பதுங்குறாங்களே.. அங்கதான் இருக்கு ட்விஸ்ட்? எடப்பாடிக்கு அக்னி பரிட்சை
ஈரோடு கிழக்கு தேர்தலில் தோற்றால் கூட ஓபிஎஸ், டிடிவிதான் வாக்கை பிரித்தனர் என்று தன்னுடைய தோல்விக்கு எடப்பாடி காரணம் சொல்ல முடியாது.
சென்னை: அதிமுகவின் பொது வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு நிற்கிறார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரின் தரப்பும் இந்த ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது. இவர்களின் இந்த முடிவிற்கு பின் பாஜக இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். எதிர் தரப்பில் பல்வேறு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பலர் கழன்று கொண்டதால் திமுக vs அதிமுக vs நாம் தமிழர் vs தேமுதிக என்று தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக மாறி உள்ளது.
முதலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா.. போட்டியிடாதா என்ற குழப்பம் இருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்த முயன்று கொண்டு இருந்தது.

ஓ பன்னீர்செல்வம் விளக்கம்
இன்னொரு பக்கம் அமமுக தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம். இல்லையென்றால் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று கூறியது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அப்படியே பிரியும் நிலை ஏற்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றால் கூட வாக்குகள் பிரிந்ததால் அந்த கூட்டணி வென்றது என்று எளிதாக வாதம் வைக்கும் நிலையே இருந்தது,. இந்த நிலையில்தான், தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார்.

உச்ச நீதிமன்றம்
பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் மூலம் கே.எஸ் தென்னரசு வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்துள்ளது.

பாஜக ஆதரவு
தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. பாஜகவும் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுகவை ஆதரிக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் கே. எஸ் தென்னரசுவை ஆதரிக்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். மொத்தத்தில் ஓபிஎஸ் நிற்கவில்லை, அமமுக தரப்பு நிற்கவில்லை, பாஜக நிற்கவில்லை. இந்த முடிவிற்கு பின்னணியில் பாஜக இருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். எடப்பாடியை தனியாக மோதவிட்டு படுதோல்வியை பரிசளித்து நெருக்கடி கொடுக்க பாஜக திட்டமிடுகிறது.

தனியாக நிற்கட்டும்
எடப்பாடி டீம் தனியாக நின்றால் அவர்களுக்கு கவுண்டர்கள் வாக்குகள் தவிர மற்ற பிரிவினரின் வாக்குகள் முக்கியமாக செங்குந்த முதலியார், மைனாரிட்டி, அருந்ததியர்கள் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் ஆளும் திமுக அமைச்சர்கள் எல்லோரும் இறக்கி வேலை செய்து வருவதால் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. திமுக தரப்பு 60%க்கும் அதிகமான வாக்குகளுக்கு பிளான் போடுவதால் எடப்பாடிக்கு இந்த தேர்தல் ஆசிட் சோதனையாக இருக்க போகிறது. இப்படி எடப்பாடியை தனியாக மோதவிட்டு படுதோல்வியை பரிசளித்து நெருக்கடி கொடுக்க பாஜக பிளான் போட்டு வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக பிளான்
இந்த தேர்தலில் தோற்றால் கூட ஓபிஎஸ், டிடிவிதான் வாக்கை பிரித்தனர் என்று தன்னுடைய தோல்விக்கு எடப்பாடி காரணம் சொல்ல முடியாது. இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சி ஜெயிப்பது வழக்கம்தான். ஆனால் ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை பகுதி. எனவே அங்கு அதிமுக மோசமாக தோற்றால் எடப்பாடி மீது பழி மொத்தமும் விழுந்துவிடும். எடப்பாடி மீது இந்த பழியை திருப்புவதுதான் பாஜகவின் பிளான் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். இதை தவிர்த்து ஈரோடு கிழக்கு தேர்தலில் வெல்ல வேண்டியது எடப்பாடிக்கு இப்போது அக்னி பரிட்சையாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications