போர் என்றால் உயிர்கள் போகத்தான் செய்யும் என சொன்னவர்கள்தானே! பொன்னையனுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி
சென்னை: பொன்னையன் விமர்சனத்திற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஈழத் தமிழர்கள் தொடர்பான விமர்சனத்திற்கு நாராயணன் திருப்பதி நறுக் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் தம்பிதுரை, பொன்னையன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொன்னையன் சாடல்
அப்போது பேசிய பொன்னையன், "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பாஜகவின் பருப்பு வேகாது. பாஜக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தி, நீட், காவிரி, ஜிஎஸ்டி, ஈழ தமிழர்கள் விவகாரத்தையும் குறிப்பிட்டு அவர் சாடி இருந்தார்.

பாஜக தாக்கு
அவரது இந்தக் கருத்து அதிமுக-பாஜக இடையேயான உறவில் பூசலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. பென்னையனின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, "பொன்னையன் விரக்தியில் பேசுகிறார். அவர் தனக்கு ராஜ்ய சபா எம்பி சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால். ஆனால் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இருக்கிறார். இதனால் தான் அவர் இப்படி பேசுகிறார்" என்று கூறி இருந்தார்.

நாராயணன் திருப்பதி பதிலடி
இந்தச் சூழலில் இதற்கு பாஜகவின் துணைத்தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதியும் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஈழத்தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தினர் கற்பழித்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்து இலங்கை அரசுடன் மத்திய அரசு இப்போது கொஞ்சி குலாவி வருகிறது. மத்திய அரசின் இந்த தமிழ் இன விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்கிறார் பொன்னையன்.

துரும்பைக் கூட கிள்ளி போடாதவர்கள்
இதுவரை இலங்கை தமிழர்களுக்கு ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடாத தமிழக அரசியல்வாதிகளுக்கு ஈழத்தமிழர் குறித்து பேச தகுதியில்லை.போர் என்றால் உயிர்கள் போகத்தான் செய்யும் என்று கூறியது யார் என்று நினைவுபடுத்தி பாருங்கள். யாழ்ப்பாணம் சென்று தமிழர்களுக்கு ஆறுதல் அளித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பதையும், முதல் தமிழக அரசியல் தலைவர் அண்ணாமலை அவர்கள் என்பதையும் நினைவில் கொள்க. நாவடக்கம் கொள்க!" என்று ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications