அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு.. புது அசைன்மென்ட் கொடுத்த பாஜக!
சென்னை: பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல மறுபுறம் அண்ணாமலையை தேசிய பொறுப்புக்கு கட்சித் தலைமை கொண்டு சென்றிருக்கிறது.
அண்ணாமலையுடன் சேர்த்து வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருக்கும் கட்சி தலைமை், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியிருக்கிறது.

தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவரை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. பெரும்பாலும் கட்சிக்குள்ளும், மேலிடத்திலும் அண்ணாமலைக்கே அதிக ஆதரவு இருந்த போதிலும், தேர்தல் நேரம் என்பதால் அண்ணாமலையை மீண்டும் மாநில தலைவர் பொறுப்பில் அமர்த்துவதில் கட்சி தலைமைக்கு சற்று தயக்கம் இருந்தது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர்தான் அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் பாஜகவின் பெயரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பது, மெத்தப்படித்தவர்கள் மத்தியில் பாஜகவை பேசு பொருளாக்குவது என்பது அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட அசைமென்ட்டாக பார்க்கப்பட்டது. கொடுக்கப்பட்ட வேலையை கச்சித்தமாக செய்த அண்ணாமலை, கூடவே திமுகவுடன் மல்லுக்கு நிற்பது என்கிற வேலையையும் சேர்த்து அவர் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
திமுக ஃபைல்கள் என்கிற பெயரில், ஊழல் விவரங்களை வெளி கொண்டு வருவேன் என அண்ணாமலை கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்தது. அதேநேரம் அதிமுக உடனான கூட்டணி முறிந்ததற்கும் அண்ணாமலையே முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அறிஞர் அண்ணா பற்றியும், ஜெயலலிதா பற்றியும் அண்ணாமலை பேசிய விஷயங்கள் சர்ச்சையாக வெடித்தது. ஏற்கெனவே பாஜகவுடனான கூட்டணிக்கு கடும் அதிருப்தியில் இருந்த ரத்தத்தின் ரத்தங்கள், அண்ணாமலை பேச்சால் மேலும் சூடாகினர்.
விவகாரம் கையை மீறி போவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் நேற்று, உடைந்த கூட்டணி இணைந்திருக்கிறது.
அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் தலைவராக இருக்கும் வரை அதிமுக கூட்டணிக்குள் வராது என்று எடப்பாடி கறாராக சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்த கூற்றை உறுதி செய்யும் விதமாக, நேற்று நடந்த பாஜக தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று உறுதி செய்யப்பட்ட பிறகே, அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியை ஓகே செய்தார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அப்படியெனில் அண்ணாமைலையின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா? என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இக்கேள்விக்கு இன்று பதில் தெரிய வந்திருக்கிறது. அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை பாஜக வழங்கியிருக்கிறது. அண்ணாமலைக்கு கன்னடம், தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை இருக்கிறது. கர்நாடகாவில் வேலை பார்த்த அனுபவமும் இருக்கிறது. எனவே, தென் மாநிலங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கட்சி வழங்கலாம்.
தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகாவையும் சேர்த்து பார்த்துக்கொள்ளும் அசைமென்ட்டை கட்சி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications