புண்படுத்திட்டாரு..தவெக மேடையில் முருகப் பெருமானுக்கு இழுக்கு! விஜய், வேல்முருகன் எதிராக பாஜக புகார்
மதுரை: தவெக மேடையில் முருகப்பெருமான் பாடலை இழிவுபடுத்தும் விதத்தில் பாடிய பாடகர் மற்றும் தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாஜக பிரச்சார பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கபட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா மேடையில் பாடகர் வேல்முருகன் முருகப்பெருமான் பாடலை மறு உருவாக்கம் செய்து விஜயை புகழ்ந்து பாடினார்.

இந்நிலையில் முருகப்பெருமானின் பாடலை இழிவுபடுத்தும் வகையில் பாடிய பாடகர் வேல்முருகன் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும், ஆதவ் அர்ஜூன் மற்றும் பொதுச் செயலாளர் என் ஆனந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக பிரச்சார பிரிவு சார்பில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரச்சார பிரிவு மாநில துணைச் செயலாளர் சுரேஷ் பேசிய போது," முருகப்பெருமானை இழிவு படுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் மீதும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆனந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். நடிகர் விஜய் மேடைகளிலும் சினிமாக்களிலும் இந்து கடவுள் கடவுள்களை இழிவுபடுத்தும், வகையில் செயல்படுகிறார்.
இளைஞர்களை மடைமாற்றம் செய்து வருகிறார். மேலும் விஜய் மாற்று மத நம்பிக்கையை இழிவுபடுத்திவருகிறார். முருகப்பெருமானின் பாடலை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் திமுகவின் ஆள் தான் விஜய் திமுக இந்து மதத்தினை இழிவு படுத்துவது போல விஜயும் செய்துவருகிறார். இதனை தமிழக வெற்றி கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளோம்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications