27ல் எத்தனை சீட்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு? டெல்லி மேலிடம் கேட்ட ரிப்போர்ட்.. பரபர!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில்
எத்தனை சீட்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது என தொகுதி பார்வையாளர்களிடம் பாஜக தலைமை ரிப்போர்ட் கேட்டுள்ளதாம். இந்த ரிப்போர்ட்கள் ரிசல்ட்டுக்கு பிறகு தலைமையால் அலசப்படும் என்பதால், தொகுதிப் பார்வையாளர்கள், உண்மைக்கு நெருக்கமான ரிப்போர்ட் தர தீவிரமாக ரெடியாகி வருகிறார்களாம்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. மேலும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், அவர் தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வழிநடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இதில் 18 தொகுதிகளில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுகவுடன் நேரடியாக களத்தில் மோதியது பாஜக. மேலும் பாஜக வேட்பாளர்களுக்கு, தேர்தல் பிரச்சாரப் பணிகளில் உதவுவதற்காக பாஜக தலைமையில் 27 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜகவில் 20 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 4 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்ப பாஜக மேலிடம் திட்டம் வகுத்தது. இதற்காக பாஜக மேலிடம் தீவிர பிரச்சார உத்திகளை வகுத்தது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ,பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக அடுத்தடுத்து தமிழகத்திற்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 85.15 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதனைத் தொடந்து பாஜக போட்டியிட்ட தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களிடம் இருந்து தொகுதி விவரங்கள், வெற்றி வாய்ப்பு குறித்தும் மக்கள் மனநிலை குறித்தும் ரிப்போர்ட் கேட்டுள்ளது பாஜக மேலிடம்.
ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்கள், பெண்கள் யாருக்கு வாக்களித்தனர் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க என்ன காரணம்? பாஜக வேட்பாளர்களுக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும், தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா? வாக்கு வித்தியாசம் எவ்வளவு இருக்கும்? பதிவான வாக்குகளில் பாஜக வேட்பாளர் எவ்வளவு சதவீத வாக்குகளைப் பெறுவார், தவெகவால் பாதிப்பு உள்ளதா? கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவர கிடைத்ததா? என்பது உள்ளிட்ட விபரங்களை கட்சி தலைமை கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபரங்கள் அனைத்தையும் விரைவாக டெல்லி மேலிடத்திற்கு அனுப்பும் பணியில் பாஜக முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட்டுகுப் பிறகும், தொகுதிப் பார்வையாளர்களின் இந்த ரிப்போர்ட் மேலிடத்தால் அலசப்படும் என்பதால், உண்மைக்கு நெருக்கமான அறிக்கையை தயார் செய்யும் பணியில் தொகுதிப் பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம்.














Click it and Unblock the Notifications