'வெறும் பேச்சுதான்.. அமைச்சர் சேகர்பாபு செயல்பாபு இல்லை.. செயலற்றபாபு..' வறுத்தெடுத்த ஹெச் ராஜா
சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயலற்றபாபு என விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, அவரது அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக உள்ளதாகவும் ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இல்லை செயல்பாபு என்றும் விரைவில் அந்த துறைக்குப் பொற்காலம் வரவிருப்பதாகவும் பாராட்டிப் பேசியிருந்தார்.
பழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன சிவகாசி
இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபுவைக் கடுமையாகச் சாடியுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, அவர் சேகர்பாபு அல்ல செயலற்றபாபு எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்,
இந்து அறம் அழிக்கும் துறை
கடந்த 2018ஆம் ஆண்டு பெரியார் சிலைகள் அகற்றுவது தொடர்பாக ஹெச் ராஜாவின் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஹெச் ராஜா நேற்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இந்து அறம் அழிக்கும் ஒரு துறையாக இருக்கிறது. அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்புக்கள் வெற்று அறிக்கைகளாகவும், கோயில்களை மூட வேண்டும் என்று கூறுவது போல் இருக்கிறது.
அவர் செயலற்றபாபு
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இவரை 'சேகர்பாபு இல்லை. செயல்பாபு' என்று பாராட்டினார். ஆனால், உண்மையில் அவர் செயல்பாபு இல்லை, செயலற்றபாபு என்பதே உண்மை. இதற்கே பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களின் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர்களாக உள்ளனர். பிறகு எதற்கு புதிய அறிவிப்பு? தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 38665 கோயில்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவே தவறான தகவல். கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்ற பிறகு அரசு இதுவரை ஒரு கோயிலையாவது கட்டியுள்ளதா?
செய்யவில்லை
இந்து கோயில்களுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான ஹேக்டர் பரப்பளவில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருந்தன. ஆனா்ல் இப்போது அந்தளவு நிலங்கள் இல்லை. ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது என்றால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பொறுப்பில் இருந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இந்த 130 நாட்களில் ஏன் சேகர்பாபு இதைச் செய்யவில்லை அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புகள் எல்லாம் வெறும் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன
12 கல்லூரிகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். உயர்கல்வி துறை அமைச்சரும் இது தொடர்பாக அறிவித்துள்ளார். எனவே, இந்த கல்லூரிகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கல்லூரிகள் இருந்தால் மதக்கல்வி கட்டாயமாக இருக்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை, சட்டத்திலேயே அப்படி தான் இருக்கிறது.
நீட் தேர்வு
நீட் தேர்வு மரணத்திற்கு திமுகவே காரணம், நீட் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இனி அதற்கு மாணவர்களைப் பொறுப்புடன் தயார் செய்வதே அரசியல் கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் கூட நீட் தேர்வு முறையாக நடைபெறுகிறது. நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்கள் பிரிவினைவாதி" என்று கடுமையாக விமர்சித்தார்.