அயோத்தி ராமர் கோவில் திறப்பு.. மோடி மீது எடப்பாடி பழனிசாமி நேரடி அட்டாக்.. ஆடிப் போன பாஜக!
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து பிரதமர் மோடியை நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது பாஜகவை ரொம்பவே ஆடிப் போக செய்துவிட்டது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. டெல்லியில் "இந்தியா" கூட்டணிக்கு போட்டியாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

விமர்சனமற்ற போக்கு: ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா, ஜெயலலிதா என அதிமுக தலைவர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்தார். இதனைத் தொடர்ந்தே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக முடிவெடுத்தது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்த போது கூட, தற்காலிகமான முடிவாகத்தான் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில்தான் கடந்த 3 மாதங்களாக அதிமுக- பாஜக இரு கட்சிகளுமே பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களைத் தவிர்த்தே வந்தன. பாஜகவுக்கு ஆதரவான சில நிலைப்பாடுகளையும் அதிமுக எடுத்து வந்தது. இதனை திமுக கூட்டணி கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சித்தும் வந்தன.
பாஜகவின் நம்பிக்கை: அதேபோல அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்து முன்னர் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதை ஆதரிக்கும் வகையில்தான் கூறியிருந்தார். இதுவும் பாஜகவுக்கு ஒருவித நம்பிக்கையைத் தந்தது. எப்படியும் கடைசிநேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வந்துவிடும் என்பது அந்த நம்பிக்கை.
மோடிக்கு பதிலடி: ஆனால் சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கோவில் கட்டுவதால் ஓட்டுகள் வந்துவிடாது. அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைத்ததாலேயே மோடிக்கு எல்லோரும் ஓட்டுப் போடுவார்களா? அப்படியானால் அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டன; குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன; அன்னதானம் தொடங்கப்பட்டன. எடப்பாடி சுற்றிய கிராமங்களில் கட்டப்பட்ட கோவில்களுக்காக அன்னப்போஸ்ட்டாக நான் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.
அதிர்ந்து போன பாஜக: பாஜகவுடனான உறவு முறிவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை முதல் முறையாக கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவினரை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். அதிமுக, கூட்டணிக்கு வரும் என்ற பாஜகவின் நம்பிக்கையை ஒரே அடியாக தகர்த்து எறிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது மூத்த பத்திரிகையாளர்களின் கருத்து.
"இந்தியா" கூட்டணி பிளவு: அத்துடன், "இந்தியா" கூட்டணியில் இருந்து இன்னும் எத்தனை கட்சிகள் வெளியேறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் எடப்பாடி பழனிசாமி பொடி வைத்து பேசியிருப்பதும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கை கோர்ப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டி இருக்கிறது என்கின்றன தேசிய ஊடகங்கள்.












Click it and Unblock the Notifications