வாக்காளப் பெருமக்களே வணக்கம்... இணையவழி பிரச்சாரம்... களமிறங்கும் பாஜக நட்சத்திரப் பட்டாளம்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்குவதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
கூட்டணி விவகாரம் எப்படி அமைந்தாலும் சரி தேர்தல் பிரச்சாரம் மிக முக்கியம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
மேலும், பாஜகவில் உள்ள நட்சத்திர பட்டாளங்களை தேர்தல் பரப்புரையில் முழுமையாக ஈடுபடுத்தும் வகையில் அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்படவுள்ளது.
திமுக பக்கம் சாய்கிறதா பாஜக? அடுத்தடுத்து குவியும் பாராட்டு.. வெங்கையாவே வியந்து வாழ்த்தியிருக்காரே!
2021 தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளதால் பம்பரமாக சுழன்று வருகிறார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன். திருச்சி, திருப்பூர், கோவை என மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார். எல்.முருகன் மாநில தலைவராக பதவியேற்ற தருணத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுமார் 4 மாத காலமாக கட்சிப் பணிகளை அவரால் முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.
மிகத் தீவிரம்
தற்போது ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 மாதமாக ஆற்றியிருக்க வேண்டிய பணிகளையும் இப்போது சேர்த்து வைத்து செய்து வருகிறார் முருகன். அந்தவகையில் மினி பிரச்சார டூர் ஒன்றை அவர் அடித்து வருகிறார். இதனிடையே பாஜகவில் உள்ள நட்சத்திரங்கள் மூலம் இணைய வழி பிரச்சாரத்தை தொடங்கவும் திட்டமிட்டு வருகிறார். விரைவில் அதற்கான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
யார் யார்?
தமிழக பாஜகவில் நடிகைகள் குட்டி பத்மினி, நமீதா, காய்த்ரி ரகுராம், கவுதமி, மற்றும் நடிகர்கள் ராதாரவி, ஆர்.கே.சுரேஷ், என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தினர் பாஜகவில் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் இணைய வழி பிரச்சாரத்தை முதற்கட்டமாக தொடங்கிவிட்டு அடுத்தக்கட்டமாக களப்பிரச்சாரத்தை தொடங்க வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரச்சார பயிற்சி
பிரச்சாரத்தின் போது எதைப்பற்றி பேச வேண்டும், எதைப்பற்றி பேசக்கூடாது என்பது பற்றியெல்லாம் பாஜக நட்சத்திரங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. மத்திய அரசின் சாதனைகள் மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறப்படவுள்ளது. ஆக, விரைவில் அன்பான வாக்காளப் பெருமக்களே என்ற குரல் ஒலிக்கத் தொடங்கும்.