“அசிங்க ஃபேக்டரி”.. திமுக தலைவர்கள், பெண்களை இழிவுபடுத்தி பதிவு! பாஜக ஆதரவாளரை மடக்கி பிடித்த போலீஸ்
கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த பாஜக ஆதரவாளரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்து வந்த பாஜக ஆதரவாளர் ஜான் ரவியை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
சென்னை கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் என்பவரது மகன் ஜான் ரவீந்திரநாத். பாஜக ஆதரவாளரான ட்விட்டரில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்தும், திமுக, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசை, பாஜகவை விமர்சிப்பவர்களை எதிர்த்தும் இவர் ட்விட்டரில் கருத்திட்டு உள்ளார்.

அண்ணாமலையுடன் போட்டோ
ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை கவர் படமாக வைத்து இருக்கும் அவர், தன்னுடைய பயோவில் சங்கி என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இவர் நிற்பதை போன்ற புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில்தான் ஜான் ரவியின் ட்விட்டர் பதிவுகள் கடந்த சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

இழிவுபடுத்தும் பதிவுகள்
பாஜக மற்றும் அதன் தலைவர்களையும், மத்திய அரசையும் விமர்சிப்பவர்களையும் கொச்சைப்படுத்தி ட்விட்டரில் இவர் பதிவிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், நடிகைகள், பெண்களை தகாத முறையில் இவர் இழிவுபடுத்தி கருத்து தெரிவித்து உள்ளதாக புகார் எழுந்தது.

கருணாநிதி - துரைமுருகன்
மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து இவர் வெளியிட்ட பதிவு திமுகவினரை கொந்தளிப்படைய செய்தது. அவரின் தாடையை அமைச்சர் துரைமுருகன் பிடித்து இருப்பதை போன்ற படத்தை பதிவிட்ட ஜான் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கருணாநிதியையும் துரைமுருகன் இழிவாக பேசுவதைபோல் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

ஸ்டாலின் மீது விமர்சனம்
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தன்று சென்ற படத்தை பகிர்ந்து "இன்று நாம் நாட்டுக்கே ராசாவாக இருந்தாலும் நாம் யார் என்கிற அடையாளத்தை மறக்கவே கூடாது" என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையிலும் இவர் பதிவிட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவரை ஆபாசமாக சித்தரிக்கும் படம் ஒன்றை பகிர்ந்து தகாத முறையில் விமர்சித்து இருந்தார் ரவி. இந்த நிலையில் இவரது பழைய ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கைது செய்த போலீஸ்
திமுக ஐடி பிரிவிடமும் இந்த புகாரை திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் முன்வைத்தனர். இந்த நிலையில் திமுக ஐடி விங் நடத்தும் ITW ரிப்போர்ட்ஸ் என்ற ட்விட்டரில் கணக்கில், ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திமுக ஐடி விங் தெரிவித்து இருந்தது. இருப்பினும் ஜான் ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளதாக ITW ரிப்போர்ட்ஸ் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications