8+4.. அதிமுகவை 24 மணி நேரமாக அல்லோகலப்படுத்தி வைத்திருக்கும்.. பாஜகவின் கணக்கு! எடப்பாடி சறுக்குறாரோ
சென்னை: அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் கணக்கு ஒன்றை பாஜக கையில் எடுத்து உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தைகளை பாஜகவின் தலைவர்கள் முடுக்கி விட்டுள்ளாராம்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைகள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை பேசி முடிந்துவிட்டது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
பாஜக பேச்சுவார்த்தை: இன்னொரு பக்கம் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய மார்ச் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். சீக்கிரம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம்.
பாமக, தேமுதிக, இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வருகின்றன. தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்ளும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாம்.
5 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் கேட்டும் கொடுக்கப்படாத நிலையில் தேமுதிக அதிமுகவுடன் பேச்சை நிறுத்திவிட்டு பாஜகவுடன் பேச்சை தொடங்கி உள்ளதாம் தேமுதிக.
மேலும் பாமக உடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸ் உடனும், பிரேமலதா உடனும் பேச்சுவார்த்தை நடத்த 2 மத்திய அமைச்சர்களை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு அனுப்பி இருக்கிறாராம். பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக அமைச்சர்கள் விகே சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று தமிழ்நாடு வருகிறார்கள். இரண்டு கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்கு செல்ல விடாமல் பாஜக கூட்டணிக்கு அழைப்பதே இவர்களின் நோக்கம் என்கிறார்கள் .
பாஜகவின் கணக்கு: அதன்படி பாமகவுக்கு 8 சீட், தேமுதிகவிற்கு 4 சீட் என்று கொடுக்க பாஜக திட்டமிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதாம். இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் இதை பாஜக ஏற்கவில்லை. ராஜ்ய சபா சீட் கிடையாது மாறாக பணம் கேட்டதில் மூன்றில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம்.
பாமக - 8
தேமுதிக -4
டிடிவி தினகரன் -4
ஓபிஎஸ் -2
பாஜக - 13
ஐஜேகே-1 , மற்றவை-2
புதிய தமிழகம் -2
தமிழ் மாநில காங்கிரஸ் -2 என்று கூட்டணி முடிவாக வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக காய் நகர்த்தி வருகிறதாம். கடந்த 24 மணி நேரமாக இதற்கான பேச்சுவார்த்தைகள்தான் நடந்து வருகிறதாம்.
அதிமுக தனித்துவிடப்பட்டது; இதனால் அதிமுக தனித்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். முக்கியமாக பாமக, தேமுதிக இல்லை என்றால் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி எதுவும் இருக்காது. முக்கியமாக புதிய தமிழகம் கூட பாஜக கூட்டணிக்கு போகும் சூழலில் உள்ளது. இது அதிமுகவிற்கு சிக்கலாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications