ரெடியாகும் புதிய பிளான்.. நேரடியாக இறங்கும் நயினார், அண்ணாமலை! நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் நாளை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் தான் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்தத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாகவே அனைத்து அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன.

உயர்மட்டக் கூட்டம்
ஒரு பக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றன. அதேநேரம் மற்றொரு பக்கம் கூட்டணி குறித்த காய்களையும் அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தி வருகின்றன. இதற்காக முக்கிய தலைவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதற்கிடையே பாஜக சார்பில் நாளைய தினம் சென்னையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார். மேலும், மூத்த தலைவர்களான மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஏன் முக்கியம்
சமீபத்தில் தான் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நயினார் நாகேந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தான் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது அவர் பாஜக எந்தத் தொகுதிகளில் எல்லாம் போட்டியிடலாம் என சொல்லி 54 தொகுதிகள் கொண்ட லிஸ்ட்டை அமித்ஷாவிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. அதேபோல அண்ணாமலையும் கூட சமீபத்தில் தான் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்தச் சூழலில் தான் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவே இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம், அதிக வெற்றி வாய்ப்பு எந்தத் தொகுதிகளில் இருக்கிறது என்பது குறித்து மூத்த பாஜக தலைவர்கள் ஆலோசிக்கவுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியை வலிமைப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.
என்ன ஆலோசனை
இப்போது தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் அதிமுகவும் பாஜகவும் மட்டுமே பிரதானக் கட்சிகளாக உள்ளன. பாமக மற்றும் தேமுதிகவை இந்த கூட்டணிக்குள் அழைத்து வருவது குறித்த முயற்சிகள் நடக்கிறது. அது குறித்தும் ஆலோசனை நடக்கும். மேலும், டிடிவி, ஓபிஎஸ், சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் அதில் உள்ள சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications