'திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி.. தேர்தல் ஆணையம் காட்டிய விஸ்வாசம் இருக்கே..' அண்ணாமலை நறுக்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று விமர்சித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்குக் காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல்துறையை மிஞ்சிவிட்டது என்றும் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடந்தது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதேபோல இதர மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகளும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 78.47% வாக்குகளும் பதிவாகின. தமிழகத்தில் உள்ள 74 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை வெளியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வென்றுள்ளன.

அண்ணாமலை அறிக்கை
இந்தத்த தேர்தலில் அதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது இந்நிலையில், திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சி உறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது.

வேட்புமனு தள்ளுபடி
அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்புமனுக்களை எல்லாம் காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம் மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். மருத்துவமனையில் இறந்து விட்டார், இப்படியாக மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் வெற்றிக்கான முன்னுரையை வேட்பு மனுத்தாக்கல் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது.

தேர்தல் ஆணையம் மிஞ்சிவிட்டது
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைத்த பிறகு அவர்களின் மிக விசுவாசமாக நடந்து கொள்வதில் தமிழக காவல்துறை போட்டியின்றி முதலிடத்தில் இருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலைப் பார்க்கும்போது மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்குக் காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல்துறையை மிஞ்சிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் மாநில தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் கைகோர்த்துக்கொண்டு திமுகவின் வெற்றிக்கு அரும்பாடு பட்ட அவலத்தைத் தமிழக மக்கள் முகம் சுளித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாநில தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அதனிடம் அரசியல் கட்சிகள் வாழ முடியாது என்பது சட்டம். ஆனால் தமிழகத்தில் நடைபெற்றது மகா மட்டம்.

நேர்மையாக நடந்ததா?
ஆளும் கட்சியின் உத்தரவை நிறைவேற்றும் அடிமைகளாகத் தேர்தல் ஆணையம் இன்று நடந்து கொண்டதை மத்திய அரசும் நீதிமன்றமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலை நேர்மையாக நடத்துவது ஆணையத்தின் தார்மீகப் பொறுப்பு. அதிலும் இம்முறை நீதிமன்றம் தலையிட்டு எச்சரிக்கைகள் விடுத்தபோது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என்று மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு உறுதி அளித்திருந்தது. ஆனால் நடந்தது வேறு, அது நேர்மாறு, அது நேர்மைக்கும் மாறு!

சிசிடிவி கேமராக்கள்
வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு கட்டிடமும், வாக்கு எண்ணிக்கை மையமும் மிகவும் முக்கியமான தளங்கள். இங்கெல்லாம் கண்காணிப்பு கேமரா வெறும் கண்துடைப்புக்காக மட்டும் வைக்கப்பட்டிருந்தது. பல கேமராக்கள் வேலை செய்யவில்லை ஒரு சில கேமராக்கள் வேலை செய்தபோதும் அவையெல்லாம் திமுகவை எதிர்ப்பவர்களை உள்ளே விடாமல் தடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

திமுகவின் அரசியல் சாயம்
ஆட்சி தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே தான் கொடுத்த வாக்குறுதிகளில் எல்லாம் பின்வாங்கி திமுகவின் அரசியல் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதால் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆட்சி தொடங்கிய உடனேயே தாங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் அது தேர்தலின் மூலமாக வெளிப்பட்டு விடக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணையத்தின் துணையுடனும் காவல்துறையினரின் அராஜகத்துடனும் திமுகவினர் சாதுரியமாகச் சதிச் செயல்களைச் செய்தனர்.

ரகசியமாக நடந்த வாக்கு எண்ணிக்கை
மக்களின் நம்பிக்கையை இழந்த திமுகவின் இந்த அச்சம் உணர்வு மிக வெளிப்படையாகவே தெரிந்தது. தோழமை அதிமுக கட்சியின் நிர்வாகிகளும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் பரவலாக அனைத்து தொகுதிகளிலும் காரணங்கள் ஏதுமின்றி கைது செய்யப்பட்டனர். அவர்களை எல்லாம் தேர்தல் பணியைப் பார்க்க விடாது தடுப்பதற்காக திமுக அரசு காவல்துறை உதவியுடன் மாற்றுக் கட்சியினரைப் பல தொகுதிகளில் கைது செய்தனர். வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மிகத் தாமதமாகவும், சில இடங்களில் மாற்றுக் கட்சியினரை வெளியேற்ற பின் ரகசியமாகவும் நடைபெற்றது.

பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி
உண்மைக்கு மாறாக வாக்கு எண்ணிக்கைகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டன. சில இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் தோல்வியுற்றவர்கள் ஆக அறிவித்த கொடுமையும் நடைபெற்றது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் வேட்பாளர்கள் தடுக்கப்பட்ட போதும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்ட போதும் காவல்துறையினர் அத்துமீறிய போதும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எங்களது தோழமை கட்சியினரும் வாக்களித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் கடினமான சூழலில் கடமை தவறாமல் பணியாற்றிய பாஜகவின் தோழமை கட்சியின் தொண்டர்களுக்கும் எங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,












Click it and Unblock the Notifications