மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து.. பல லட்சம் பேரை நீக்க பாஜக திட்டம்? ஸ்டாலின் தந்த வார்னிங்!
சென்னை: பழனிசாமி போன்ற ஆமாம் சாமிக்கள் பாஜகவிற்கு தலை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் நம் உரிமைகள் பாதிப்பு அடையும். அண்மையில் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்த பாஜக மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 லட்சம் பேரை நீக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டிலும் அப்படி நீக்கத்தான் திட்டமிடுகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் மகளிருக்கு ரூ.5000 தரும் அறிவிப்பை வெளியிட்டார். மகளிருக்கு தொகை வழங்கிய பின்பே.. அதாவது வரவு வைக்கப்பட்ட பின்பே இந்த அறிவிப்பது அவர் வெளியிட்டு இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.
ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற 'நியூஸ் 18 நெட்வொர்க் டவுன் ஹால்' (News18 Network Town Hall) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அரசியல் அணுகுமுறைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நிலைகுலையச் செய்ய பாஜக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர், தமிழகம் மீண்டும் அத்தகைய சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் என்று கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சிக்கும் மதிப்பே கொடுக்காத பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநில அரசுகளைப் பலவீனப்படுத்த நினைக்கும் வேளையில், எங்களது 'திராவிட மாடல்' அரசு தமிழகத்தில் உள்ளடக்கிய வளர்ச்சியையும், சாதனை அளவிலான முன்னேற்றத்தையும் நிலைநாட்டியுள்ளது.
பழனிசாமி போன்ற ஆமாம் சாமிக்கள் பாஜகவிற்கு தலை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் நம் உரிமைகள் பாதிப்பு அடையும். அண்மையில் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்த பாஜக மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 லட்சம் பேரை நீக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டிலும் அப்படி நீக்கத்தான் திட்டமிடுகின்றனர் .
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளில் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுத்தி.. ஆட்சியில் இடையூறைகளை ஏற்படுத்துவதே பாஜகவின், ஒன்றிய அரசின் நோக்கம். ஆனால் இதை எல்லாம் மீறி தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், வெறும் அரசியல் களம் மட்டுமல்ல, அது மாநில சுயாட்சியையும் சமூக நீதியையும் காப்பதற்கான ஒரு நேரடி சித்தாந்தப் போர். எந்த மாநிலமும் பதிவு செய்யாத 11.19% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. எந்த மாநிலமும் செய்யாத திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம்.
பெண்கள், ஆண்கள், திருநங்கைகள், மாணவ மாணவியர், தொழில்முனைவோர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று எல்லா பிரிவினரும் பலன் அடையும் வகையில் நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம். பாஜகவின் சதி அரசியலை மீறி நாங்கள் முன்னேறி வருகிறோம். எங்களின் வளர்ச்சி இப்படி எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது போன்ற வளர்ச்சி எல்லாம் சாதாரணமாக வந்துவிடாது.
சமூக நீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பது இதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. அச்சுறுத்தல் அரசியல், நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சோதனைகள் மூலம் கட்சித் தாவல்களைத் தூண்டுதல் போன்ற விவகாரங்களை எதிர்த்து ஆட்சி செய்தும் வருகிறோம்.
மிரட்டல் அரசியல் மற்றும் விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியலைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது போன்ற சக்திகளைத் தமிழகம் ஏற்கனவே வீழ்த்தியுள்ளது, மீண்டும் ஒருமுறை வீழ்த்தும்.
கடந்த அதிமுக ஆட்சியில்.. பாஜக இவர்கள் மீது ரெய்டு மூலம் பிரஷர் போட்டது. கூட்டணிக்கு பின் அதில் நடவடிக்கை இல்லாமல் போய்விட்டது. அதோடு மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளில் FIR கூட போட விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவிற்கு ஆமாம் சாமி போடும் பழனிசாமிகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.
தீவிரமடையும் அரசியல் களம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையிலேயே, முதலமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களது நிலைப்பாடுகளைத் தீவிரப்படுத்தி வரும் சூழலில், ஸ்டாலினின் இந்த "சித்தாந்தப் போர்" என்ற முழக்கம் தேர்தல் களத்தின் திசையைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications