பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி உள்ளது. அதேபோல் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் தவெகவின் பக்கம் சாய்ந்துள்ளது. இந்நிலையில் தான் திமுகவின் ஆதரவை பெறுவதற்கான தேவையான முயற்சியை பாஜக தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பாஜகவுடன், திமுக கைகோர்க்குமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. திடீரென்று இந்த அரசியல் சூழல் மாற என்ன காரணம்? பாஜகவின் பிளான் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது. தவெக தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். இந்த தேர்தல் முடிவை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்து 2 அமைச்சர் பதவிகளை பெற்றது.

அதன்பிறகு திமுக கூட்டணியில் இருந்த 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெக கூட்டணிக்கு ஆதரவு வழங்கின. இதில் விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சர் பதவி பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றன.
இதனால் தற்போது திமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று 5 முக்கிய கட்சிகள் தற்போது தவெகவின் பக்கம் நிற்பது திமுகவின் கூட்டணி பலத்தை குறைத்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாஜக காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி தங்களுக்கு ஆதரவு வழங்கும்படி திமுகவிடம், பாஜக மேலிடம் சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெகவிடம், திமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பதவியை இழந்தார்.
இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 5 கட்சிகள் தவெகவின் கூட்டணியில் சேர்ந்துள்ளன. இதில் காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 3 கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன. 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.
மேலும் இந்த 5 கட்சிகளும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பவை. இப்படியான சூழலில் அந்த கட்சிகள் தவெகவின் பக்கம் போய் இருப்பதாக திமுக பிற சிறிய கட்சிகளுடன் தனி கூட்டணியாக உள்ளது. இதனால் முக ஸ்டாலின் தலைமையிலான திமுகவிடமிருந்து நாடாளுமன்ற லோக்சபாவில் நிபந்தனையுடனான ஆதரவைப் பெற பாஜக திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் லோக்சபாவில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு அரசியலமைப்பு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவுடன் (Delimitation Bill) ஆகியவை ஒன்றாக கொண்டு வரப்பபட்டது. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா என்பதால் ஆளும் பாஜகவிற்கு லோக்சபாவில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் எண்ணிக்கை வேண்டும். அப்படிப்பார்த்தால் லோக்சபாவில் 360 எம்பிக்களின் ஆதரவு மசோதாவிற்கு வேண்டும். ஆனால் பாஜக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் தான் உள்ளனர். கடந்த ஓட்டெடுப்பில் 298 வாக்குகள் கிடைத்தன. இதனால் 2 மசோதாக்களும் தோற்கடிக்கப்பட்டன.
இந்த மசோதாவை மீண்டும் ஜூலை மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக தற்போது ஒவ்வொரு கட்சிகளிடமும் ஆதரவு கோரி வருகிறது பாஜக. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் உடன் கூட்டணியை முறித்து நேற்று டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காத திமுகவிடம் மசோதாவிற்கு ஆதரவு வழங்கும்படி பாஜக சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது திமுகவிற்கு லோக்சபாவில் 22 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற தேவையான 360 எம்பிக்களின் எண்ணிக்கையை எட்டுவதில் பாஜகவுக்கு சுலபமாக இருக்கும். இதனால் தற்போது இருகட்சிகள் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாஜகவுடன், திமுக கைகோர்க்குமா? என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications